நாளை பாஜக செயற்குழு கூட்டம்.. கடந்த முறை போல பரபரப்பைக் கிளப்புவாரா அண்ணாமலை? எகிறும் எதிர்பார்ப்பு!
கோவை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, மேலிட இணைய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடந்த முறை சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக தனித்து போட்டியிடும், இல்லாவிட்டால் மாநில தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
இதனால் பாஜக - அதிமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் மாற்றி மாற்றி விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால், அதிமுக - பாஜக கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடராதோ என்ற நிலை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக உறுதிப்படுத்தினார். மேலும், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்துப் பேசி அவர்கள் இருவரையும் அமித் ஷா சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, 2024 தேர்தலுக்கு கூட்டணி உறுதி செய்யப்பட்டது. எனினும், பாஜக மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே இன்னும் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. அமித் ஷா அறிவுறுத்தலுக்குப் பிறகும் மோதல் போக்கு நிகழ்வது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாளை பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த செயற்குழு கூட்டத்தை அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications