கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்.. திமுக நிர்வாகி மகனுக்கு தொடர்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு!
கோவை: கேரளாவுக்கு கனிமவளங்களை கடத்தியதாக கோவை மாவட்ட மதுக்கரை திமுக நகராட்சி தலைவரின் மகன் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக நகராட்சித் தலைவர் மகனுக்கு சொந்தமான 2 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, கனிமவளக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
கோவையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை நிர்வாகிகள் கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை - திருமலையம்பாளையம் சாலையில் சோதனை நடத்திய போது, கனிமவளங்களை ஏற்றி வந்த 2 லாரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அப்போது கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு வாகனங்களுக்கான அனுமதி ஆவணங்கள் குறித்து சோதனை செய்த போது, 2 வாகனங்களுக்கும் அனுமதி இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக 6 யூனிட் கனிமவளங்களை டாரஸ் லாரிகளில் கடத்தியதாக, அதிகாரிகள் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டாரஸ் லாரிகளும் திமுக நிர்வாகியின் மகனுக்கு சொந்தமானது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோவை மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான 2 டாரஸ் லாரிகள், மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications