வேண்டாம் வேண்டாம் என்று சொல்வதே கம்யூனிஸ்ட்களுக்கு வேலை! கோவை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பாய்ச்சல்!
கோவை: வேண்டாம் வேண்டாம் என கூறும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் என்றும் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கோவையில் எம்.பி.க்களாக இருப்பதால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவிடாமல் தடுத்து வருகிறார்கள் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் கோவைக்கு மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை அள்ளிக் கொடுத்துள்ளதாக கூறிய அண்ணாமலை மக்களை ஏமாற்றுவதில் தான் முதல்வர் ஸ்டாலின் நம்பர் 1 என விமர்சித்தார்.

ஜே.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கோவை வந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டக் கட்சிக்காரர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக முக்கியத் தலைவர்கள் அனைவரும் அங்கு ஆஜராகி இருந்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்க வில்லை.

பட்டத்து இளவரசர்
உதயநிதி ஸ்டாலினை பட்டத்து இளவரசர் என்று விமர்சித்த அண்ணாமலை 2 நாட்களுக்கு முன்னர் உதயநிதி கோவை வந்த போது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டதாக கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தமிழக மக்களை ஏமாற்றுவதில் அவர் தான் நம்பர் 1 என்று விமர்சித்த அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாக்கினார். வேண்டாம் வேண்டாம் என்று கூறும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான் என்றும் ஊரை வளர்ச்சி அடையவிடமாட்டார்கள் எனவும் விமர்சித்தார்.

முன்னுக்கு பின்
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என முதல்வர் பேசுவதாகவும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 கொடுக்கச் சொன்ன ஸ்டாலின், இப்போது ஏன் அதை வழங்கவில்லை என அண்ணாமலை வினவினார். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு ஏன் வழங்கவில்லை என வினவிய அண்ணாமலை, அரசை நம்பி கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினார்.

நிச்சயம் வெற்றி
ஜே.பி.நட்டா தமிழகத்தில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாகவும் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் பற்றி மட்டும் பேசிவிட்டு அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications