கோவையில் கிளாஸ் எடுத்த பி.எல்.சந்தோஷ்.. மொத்த பாஜக நிர்வாகிகளும் ஆஜர்.. அண்ணாமலை வரலையே
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக மையக்குழு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கூட்டத்தில் அனைத்து மூத்த நிர்வாகிகளும் பங்கேற்ற நிலையில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் மற்றும் பாஜக போட்டியிட்ட 27 தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

பாஜக தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்
இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் கலந்து கொண்டார். தமிழக பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டனர். பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரவு 7.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் 9.15 மணி வரை நீடித்தது. தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தேர்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
நள்ளிரவு வரை ஆலோசனை
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. பி.எல். சந்தோஷ் வருகையால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கோவை பாஜக அலுவலகம் வந்து, சந்தோஷை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
இரவு 9.45 மணியளவில் பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பி.எல். சந்தோஷ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன், முருகன், தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர். சேகர், கார்த்தியாயனி, கருப்பு முருகானந்தம், ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பங்கேற்கவில்லை
நள்ளிரவு 12 மணிவரை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அண்ணாமலை வீடு கோவையில் தான் உள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.
சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு பாஜக முக்கியத்துவம் வழங்கியது. அவர் தேர்தலில் போட்டியிடாவிடினும் ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அவரை பிரச்சாரம் செய்ய வைத்தனர். இந்தக் கூட்டத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக மூத்த நிர்வாகிகள் கோவை பாஜக அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் அண்ணாமலை பாஜக மையக்குழு கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications