4 நாளா கமலாலயம் பக்கம் நான் போகலை! சி.வி.சண்முகம் பாஜகவில் சேர்ந்துட்டாரானு கேட்டு சொல்றேன்! அண்ணாமலை
கோவை: மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என தெரியவில்லை, நான் கேட்டு சொல்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுககு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தமிழக அரசு செய்து வருகிறது.

தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிிறார்கள். அமைச்சர்களிடம் கெஞ்சுவதுதான் திமுகவின் சமூகநீதி. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக பயணிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் சி.வி.சண்முகம் இப்படி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: உதயநிதி மகன் இன்பநிதி அடுத்து அரசியலுக்கு வர வேண்டும் என திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவிதான் உதயநிதிக்கு கொடுத்திருக்க வேண்டும். அது தான் சரியாக இருந்திருக்கும். திமுகவினர் தனிமனிதனுக்காக ஜால்ரா அடிப்பதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். பழைய வரலாற்றை திமுகவினர் திரும்ப படிக்க வேண்டும்.
சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என தெரியவில்லை. 4 நாட்களாக கமலாலயம் செல்லவில்லை. சி.வி.சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டார் என அலுவலகத்தில் கேட்டு சொல்கிறேன். பாஜகவில் இருப்பவர்களால்தான் இதுபற்றி கருத்து சொல்ல முடியும். வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல், மோடிக்கான தேர்தல். தேர்தலுக்கு இன்னும் 16 மாதம் இருக்கிறது. அதிமுக இன்னும் வளர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பாஜக வளர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
குஜராத் மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் ஓபிஎஸ் தனது மகன் எம்பி ரவீந்திரநாத்துடன் கலந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜகதான். பாஜகவை திட்டித்தான் தினமும் முரசொலியும் திமுக சார்ந்த செய்தி நிறுவனங்களிலும் செய்தி இருக்கிறது. தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் முதல்வர் ஸ்டாலின்தான் என்றார் அண்ணாமலை. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என ஒரு பொதுக் கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது பாஜகவை மீண்டும் விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications