அர்த்த ராத்திரியில் அண்ணாமலை பிரசாரம்! 3 நாளில் 3 கேஸ்.கோவையில் கூடும் கிரைம் ரேட்..! சிக்கல் என்ன?
கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும் காவல் துறையுடன் வாக்குவாதம் செய்ததாக பாஜக மாநில தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை தற்போது கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். இதனால் கோவை தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை அதன்பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறி வந்த நிலையில் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோவை தொகுதியில் போட்டியிடுவதாக கூறியிருந்தார்.
அண்ணாமலை: இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருவதாகவும் பல இடங்களில் வன்முறையை தூண்டி விடுவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்குவதை ஒட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை தான் போட்டியிடும் கோவை மட்டுமல்லாது கூட்டணிக் கட்சி தலைவர்களுக்காகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
விதிமீறல் புகார்: இந்த நிலையில் கடந்த தேதி இரவு பீளமேடு ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10:40 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணாமலை இடம் கேட்டபோது தான் பிரச்சாரம் செய்யவில்லை வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் நான் பதில் சொல்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை 10.45 மணி வரை பிரச்சாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு: அதில் 10 மணிக்கு மேலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என கூறப்பட்டிருந்தது இதையடுத்து பீளமேடு போலீசார் 341, 293, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது மார்ச் 12ஆம் தேதி வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடும் வாக்குவாதம்: கோவை சூலூர் பகுதியில் நேற்று இரவு அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து அங்கிருந்து இருகூர் பிரிவுக்கு சென்ற அவர் 10 மணிக்கு மேலே ஆகிவிட்டதால் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டு கையசைத்தப்படி வாகனத்தில் சென்றார். இருந்தபோதும் மணி 10 கடந்து விட்டதால் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என போலீசார் தடுத்தனர். ஆனால் நான் பிரச்சாரம் செய்யவில்லை ஊர்வலமாக செல்கிறேன், என அண்ணாமலை காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .மேலும் பாஜகவினரும் காவல்துறையினரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 பிரிவுகளில் சோதனை: இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில் திடீரென அண்ணாமலை மற்றும் பாஜக தொண்டர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அண்ணாமலை மற்றும் பாஜகவின் இடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, நிர்வாகிகளான சேலஞ்சர் துரை, சிதம்பரம், விஜயகுமார் மற்றும் 300 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதி இன்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் ஒரு வழக்கு: இதேபோல் காமாட்சிபுரம் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல் ,பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், அனுமதியின்றி ஒன்று கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் அண்ணாமலை மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications