கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஓட்டுநர் கனகராஜுடன் 100 முறை செல்போனில் பேசிய டிஎஸ்பி..சிபிசிஐடி உறுதி
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் இந்த சம்பவம் நடந்த போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த டிஎஸ்பியும் விபத்தில் உயிரிழந்த கனகராஜும் செல்போனில் பேசியதை உறுதி செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது இந்த சம்பவத்தின் போது எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் விசாரித்த நீலகிரி மாவட்ட போலீஸார் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. கிட்டதட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாகவே பலர் குறிப்பிட்டு வந்தனர்.
சிபிசிஐடி: கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முன்கூட்டியே கைதானவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என ஏராளமானோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போது தமிழக முதல்வராக இருந்த பழனிசாமியிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய காவல் உதவி ஆணையர் கனகராஜிடம் கடந்த வியாழக்கிழமை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

கனகராஜ் தற்போது ஆவடி ஆயுதப்படையில் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். கொடநாடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் இறந்துவிட்டார். கார் ஓட்டுநர் கனகராஜிடம் உதவி ஆணையர் கனகராஜ் பலமுறை செல்போன் மூலம் பேசியதை சிபிசிஐடி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

ஓட்டுநர் கனகராஜ்: இதுகுறித்து சிபிசிஐடி உயரதிகாரி ஒருவர் கூறுகையில் 2014 ஆம் ஆண்டு முதல் உதவி ஆணையர் கனகராஜுக்கும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜுக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது. நாளடைவில் இருவரும் செல்போனில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை உதவி ஆணையர் கனகராஜும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜும் செல்போன் மூலம் 100 க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளனர்.
இருவரும் பேசவில்லை: ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு இருவரும் செல்போன் வழியாக பேசவில்லை. இவர்கள் செல்போன் மூலம் என்ன பேசினர் என்பதை ஆய்வகத்தின் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி ஆணையர் கனகராஜுடம் விசாரித்த போது ஓட்டுநர் கனகராஜ் தெரிந்த நபர் என்பதால் என்னை நலம் விசாரிக்க தொடர்பு கொண்டார் என தெரிவித்துள்ளார். ஆனால் இது உண்மையா என ஆய்வகத்திற்கு அனுப்பியதும் தெரியவரும்.

செல்போன் உரையாடல்கள் ஆய்வு: அது போல் கொள்ளை சம்பவத்தின் போது நடந்த செல்போன் உரையாடல்களை கண்டறிய திருச்சியில் உள்ள தொலைதொடர்பு நிறுவனத்தில் இருந்து சிடிஆர் பதிவுக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு என்ன பேசினர் என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications