மத்திய அமைச்சர் எல்.முருகனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு- நடந்தது என்ன?
கோவை : கோவை விமான நிலையத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், நுழைவுச் சீட்டைக் கேட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.முருகனுக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் ஏற்கனவே நுழைவுச்சீட்டு வாங்கி வைத்திருந்த நபர் வந்து கொடுத்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை வந்த எல்.முருகன்
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையம்
விமான நிலையத்துக்குள் செல்ல பயணிகள் செல்லும் பாதையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் சென்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரிடம் பயணச்சீட்டு கேட்டு தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் நுழைவுச் சீட்டு இல்லாததால் சிறிது நேரம் அங்கேயே நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.

காத்திருந்த நபர்
இதற்கிடையில் விமானம் புறப்படும் நேரம் மாலை 4.10 மணிக்கு என்பதாலும், மத்திய அமைச்சர் எல்.முருகன் 3.30 மணிக்கு வருவதாக இருந்ததாலும், அவருடைய பயணச்சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்துக்குள் காத்திருந்தார்.

பரபரப்பு
ஆனால் எல்.முருகன் முன்கூட்டியே வந்ததால் பயணச்சீ்ட்டை வைத்திருந்தவருக்கு அவர் வந்தது தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் அங்கு விரைந்து வந்து, எல்.முருகனை உள்ளே அழைத்து சென்றார். இதையடுத்து எல்.முருகன் கோபத்துடன் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications