போகிற போக்கில் அதிமுகவுக்கு ஒரு குட்டு.. வேலுமணியை பக்கத்தில் வைத்து கொண்டே சந்திரபாபு சம்பவம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். அதிமுக நிர்வாகிகளை உடன் வைத்துக் கொண்டே சந்திரபாபு நாயுடு அவர்களின் கொள்கைகளை விமர்சித்தது வைரலாகி வருகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கோவை வந்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியினரை ஆதரித்து அவர், கோவையில் பிரச்சாரம் செய்தார். அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கோவையில் நாயுடு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். நாயுடு மக்களுடன் சந்திரபாபு கலந்துரையாடினார்.

கோவையில் சந்திரபாபு நாயுடு
இதில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக கலந்து கொண்டனர். நாயுடு சமூகத்தினர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார். இதேபோல கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாரா லோகேஷ் கோவையில் பிரச்சாரம் செய்தார். நாயுடு மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக இந்த யுக்தியை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, "டபுள் என்ஜின் அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம்.
இலவசங்கள் ஏமாற்றும் செயல்
நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடுகிறார்கள். 1971 மக்கள் தொகை அடிப்படையில் முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இந்த கருத்து வரை அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தான் பேசி வந்தார். தொடர்ந்து பேசிய சந்திரபாபு, "பொருளாதார வளர்ச்சியை உருவாக்காமல் வெறும் இலவசங்களை மட்டும் வழங்குவது ஒருபோதும் நிலைக்காது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர். வருவாய் ஈட்டாமல், இலவசங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்" என்றார்.
அதிமுகவினர் அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களை அருகில் நிற்கவைத்துக் கொண்டே, அதிமுகவின் இலவச தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை விமர்சித்தது அக்கட்சியினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. இலவச திட்டங்களை நம்பியிருக்கும் அதிமுகவின் போக்கை, அவர்களது கூட்டணியில் உள்ளவர்களே ஏற்கவில்லை என திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு தங்களை ஆதரித்துப் பேசுவார் என்று அதிமுகவினர் நினைத்தனர். ஆனால் போகிற போக்கில் அவர் அதிமுகவுக்கும் எதிரான கருத்தை சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications