கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர்
கோவை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை களம் இப்போதே அனல் பறக்கிறது. திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலுமணி ஆதரவாளர் அப்செட்டில் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கோவையில் 3 தொகுதிகள் எதிர்பார்த்தனர். வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு, அண்ணாமலைக்காக சிங்காநல்லூர், வசந்தராஜன் என்ற நிர்வாகிக்காக கிணத்துக்கடவு தொகுதி கேட்டனர். ஆனால் அதிமுக கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கினர். இதனால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கோவை வடக்கு தொகுதி பிரச்சனை
கிணத்துக்கடவு தொகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அண்ணாமலை இடையே தொகுதியை கைப்பற்ற உச்ச கட்ட போட்டி நிலவி வருகிறது. பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால் வடக்கு தொகுதியில் பாஜகவுக்க இப்போதே பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அதிமுகவினர் கூறுகையில், "கடந்த சட்டசபை தேர்தலில் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த அம்மன் அர்ஜுனன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அம்மன் அர்ஜுனன் மாவட்டச் செயலாளர் என்பதால் சந்திரசேகர் அவருக்காக வடக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தார். தொகுதி முழுவதும் அவருக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்தார்.
அதிமுக வேலுமணி ஆதரவாளர்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர் கோவை அல்லது பொள்ளாச்சியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அப்போதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியில் இருந்தே விலகினார். தலைமையில் இருந்து பேசியதால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கோவை வடக்கு தொகுதியில் அவர் மீண்டும் களப்பணிகளை வேகப்படுத்தினார்.
தொகுதிக்குள் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்தார். பெரிய நிகழ்ச்சியை நடத்தி மகளிருக்கு ஹேண்ட் பேக், வாட்டர் கேன், இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கினார். 2022 உள்ளாட்சி தேர்தலில் கோவையின் பெரும்பாலான பகுதிகளில் திமுக வெற்றி பெற்றும், வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வார்டில் திமுக வெற்றி பெறவில்லை. சந்திரசேகரின் மனைவி ஷர்மிளா தான் வெற்றி பெற்றார்.
பாஜகவுக்கு பிரச்சனை
கடந்த 25 வருடங்களாக தொகுதியில் கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளார். இந்த தேர்தலில் எப்படியாவது அவரை வேட்பாளராக அறிவித்துவிடுவார்கள் என்று நினைத்தோம். திடீரென பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டனர். அவர் விட்டுக் கொடுத்தாலும், அவருடன் பயணிக்கும் எங்களால் இந்த ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை. அறிவிப்பு வந்ததிலிருந்து அண்ணாவும் ஊரில் இல்லை. தேர்தல் பணி செய்ய மனமில்லாமல் தவிக்கிறோம்" என்றனர்.
வடக்கு தொகுதியைச் சேர்ந்த மேலும் சில அதிமுகவினர் கூறுகையில், "சந்திரசேகர் கடும் அதிருப்தியில் உள்ளார். எம்எல்ஏ, எம்பி, மேயர் என்று எதிர்பார்த்த எந்த பதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கடந்த தேர்தல்களில் அவர் அதிமுகவுக்கு எதிராக வேலை பார்த்தால். நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தமுறையும் அவர் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக வேலை பார்ப்பார்கள். அதை மீறி இங்கு பாஜக வெற்றி பெறுவது சந்தேகம் தான்" என்றார். .












Click it and Unblock the Notifications