3 உசுரு போச்சே.. ஆழியாறு ஆற்றில் குளித்த சென்னை மாணவர்கள் பலி.. சுற்றுலா வந்த இடத்தில் சோகம்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு கோவை விடுமுறையைக் கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், ஆழியாறு ஆற்றுப் படுகையில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலரும் சுற்றுலாத் தலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கோவை மற்றும் கோவையை ஒட்டி பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை, ஈஷா, கோவை குற்றாலம், பொள்ளாச்சி ஆழியாறு அணை, கவியருவி, வால்பாறை, குன்னூர், மேட்டுப்பாளையம், உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலாவுக்காகச் செல்கின்றனர். தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரும் ஒன்றாகும்.
பச்சைப் போர்வை போர்த்தியது போன்றும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல நீர் சூழ்ந்து காண்போரை வியக்க வைக்கும் அழகு படைத்தது ஆழியாறு அணை. இங்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆழியார் பூங்கா மற்றும் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆழியார் ஆற்றுப் படுகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று குளித்து வந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் பயின்று வரும் 25 மாணவர்கள் கோடை விடுமுறைக்காக சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஆழியாறு அணைக்குச் சென்றுள்ளனர். அனைவரும் ஆழியாறு ஆற்றில் குளித்துள்ளனர்.
அப்போது, நான்காம் ஆண்டு மாணவர் ஆண்ட்ரோ செரிப் 21 என்பவர் ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்ற நிலையில் மீண்டு வர முடியாமல் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக சக மாணவர்களான ரேவன், தருண் ஆகிய மூவரும் சென்றுள்ளனர். அப்போது, அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆழியாறு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கல்லூரி மாணவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications