காரை நிறுத்தச் சொல்லி கோவையில் திடீரென சாலையில் இறங்கிய முதல்வர்! ஆடிப்போன மாநகராட்சி அதிகாரிகள்!
கோவை: கோவையில் காரை நிறுத்தச் சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சாலையில் இறங்கி ஆய்வு செய்ததால் மாநகராட்சி அதிகாரிகளும், மேயரும் ஆடிப் போய்விட்டார்கள்.
சாலைப் பணிகள் குறித்த வரைப்படத்தை முதல்வரிடம் காட்டிய போது, மாநகராட்சி ஆணையர் பதற்றத்தில் தடுமாறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதேபோல் முதலமைச்சர் என்ன கேள்வி கேட்பாரோ என்ற அச்சத்திலேயே கோவை மேயர் கல்பனா காணப்பட்டார்.

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட துளசி நகர், நஞ்சப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர். அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து துறையினருடனும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications