’Comeback’ கொடுத்துருக்காரு..பாராட்டித் தள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! நெகிழ்ந்து போன செந்தில் பாலாஜி
கோவை: கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு எந்நாளும் கடமைப்பட்டு உள்ளேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவு தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்றும், இதில் உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம் பெறுவது மட்டுமின்றி, விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் கோவை மத்திய சிறைச் சாலைக்கு சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில் 1.98 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள், எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு அவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயர் வைக்கப்படும். இந்த நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்.
சென்னையைப் போல கோவையும் நிச்சயம் பெருமை பெறும். கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த Comeback கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருடைய சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அதற்குள் நான் விரிவாக போக விரும்பவில்லை. ஏன் என்றால் இது அரசு நிகழ்ச்சி. ஆனால் தடைகளை எல்லாம் உடைத்து மீண்டும் அவர் வந்திருக்கிறார். தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செந்தில் பாலாஜி செயல்படுவார். இது உறுதி உறுதி" என பேசியிருந்தார்.
தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் எனை தாங்கிய, கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் இந்த அளவற்ற அன்பிற்கு எந்நாளும் கடமைப்பட்டு உள்ளேன்..
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) November 6, 2024
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க களப்பணியாற்றி, நலத்திட்ட பணிகளைத் வேகப்படுத்தி, கோவை… pic.twitter.com/egV7DPRlsa
இந்நிலையில் முதலமைச்சரின் பாராட்டுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,"தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் எனை தாங்கிய, கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த அளவற்ற அன்பிற்கு எந்நாளும் கடமைப்பட்டு உள்ளேன்.. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க களப்பணியாற்றி, நலத்திட்ட பணிகளைத் வேகப்படுத்தி, கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications