ஜாதி பெயர் சொல்லி “அட்டாக்”.. இம்முறை அதிமுக நிர்வாகி! வீட்டை சூறையாடி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கோவை: கூலித் தொழிலாளியை ஜாதி பெயரை சொல்லி தாக்கியதுடன் அவரது வீட்டுக்குள் புகுந்து சூறையாடிய அதிமுக நிர்வாகி கோல்ட் செல்வம் என்பவை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றனர். அடுத்தடுத்து தமிழ்நாட்டில் ஜாதி கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்து உள்ளது வடுகபாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் சுப்பிரமணி. கூலித் தொழில் செய்து வரும் இவr பொத்தியாம்பாளையம் அதிமுக அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கோல்ட் செல்வம் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
திருமணமான சுப்ரமணியின் மகளை கோல்டு செல்வம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஏற்பட்ட தகராறில் அவரை சாதி பெயரை சொல்லி வீட்டை சூறையாடியதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்நிலையத்தில் புகார்
அவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "சந்தோஷ் குமார் என்பவருக்கு எனது 2 வது மகளை திருமணம் செய்து வைத்தோம். ஆனால் சந்தோஷ் குமாரை விட்டு பிரிந்த அவர் பொத்தியாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை ஒன்றிணைச் செயலாளர் கோல்ட் செல்லும் என்பவருடன் பழகி வந்தார். தற்போது அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

ஜாதி பெயர் சொல்லி தாக்குதல்
எங்களது குடும்பத்திற்கும் கோல்டு செல்வத்துக்கும் இடையே இதனால் மனக்கசப்பும், பகையும் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் கடந்த 1 ஆம் தேதி எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுடன் பழனிக்கு பாத யாத்திரை சென்ற போது, தொப்பம்பட்டி பிரிவு அருகே கோல்ட் செல்வம் எங்களிடம் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக தட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

கொலை மிரட்டல்
கடந்த 5 ஆம் தேதி அவர் எனது வீட்டுக்கு வந்து அறிவாளை காட்டி கொலை செய்து விடுவேன் என்று கூறி, என்னுடைய ஜாதியை சொல்லித் திட்டி அங்கிருந்த கதவு, 4 ஜன்னல்கள், ஒரு கிரைண்டர், மொப்பட், மின் மீட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கைது செய்த போலீஸ்
சுப்ரமணி அளித்த இந்த புகார் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் அதிமுக நிர்வாகி கோல்டு செல்வம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications