கோவையில் ரூ.3.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் 30 வருடம் கழித்து மீட்பு.. குடியிருந்தவரே வைத்த ஆப்பு
கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை அங்கு குடியிருந்த நபர் ஒருவரே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த நிலம் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் எனறு நீதிமன்றத்தில் கோவை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து ரூ.3.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 84-வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலை பகுதியில் நகர ஊரமைப்பு துறையால் கடந்த 1997-ம் ஆண்டு 2.24 ஏக்கர் பரப்பளவில் 97,639 சதுர அடியில் 3 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 10 சதவீதம்(20 சென்ட் இடம்) பொது ஒதுக்கீடு தவிர மீதமுள்ள இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் பொது ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 7.62 சென்ட் நிலத்தில் மளிகை கடையும், சலவை தொழில் செய்யும் இடமும் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினியர் கனகசுந்தரம் என்பவர் 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக கோவை மாநகராட்சி சார்பில் அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது தான் என்று எதிர்மனு எதுவும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் ஜூலை 1ம் தேதிக்குள் 2024-ம் ஆண்டுக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி இந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கடந்த ஜூலை மாதம் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் கொடுத்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நேற்று வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை வர இருந்தது. அத்துடன் ஆக்கிரமிப்பும் நேற்று அகற்றப்பட இருந்தது. அதற்குள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தவர், தாமாக முன்வந்து நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பை காலி செய்ததுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றினார்கள். இதையடுத்து அந்த நிலத்தை கோவை மாநகராட்சி மத்திய மண்டல நகரமைப்பு உதவி திட்ட அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். 30 ஆண்டுகளுக்கு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.3.5 கோடி இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications