அண்ணாமலை திடீர் சாலைமறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு
கோவை: இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்வதாக கூறி கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரசார வாகனத்தை போலீசார் திடீரென்று தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அண்ணாமலைக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, அண்ணாமலை, பாஜகவினர் சாலைமறியல் செய்ததால் இரவில் கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் நேற்று அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கோவையில் பல இடங்களில் தீவிர பிரசாரம் செய்தனர்.
அதன்பிறகு சூலூரில் காரில் அண்ணாமலை சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று அங்கு சென்ற போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்தது நிறுத்தினர்.

அதாவது இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது. இதனால் காரை தடுத்து நிறுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அண்ணாமலை கடும் கோபம் அடைந்தார். மேலும் காரில் இருந்து அண்ணாமலை இறங்கிய நிலையில் அவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அண்ணாமலை ‛‛நான் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு தான் செல்கிறேன். நாங்கள் மைக்கை ஆப் செய்து வைத்துள்ளோம். 10 மணிக்கு மேல் நான் பிரசாரம் செய்ததாக ஒரு வீடியோவை காட்டுங்கள் பார்க்கலாம். தாமரை என்ற வார்த்தையை சொன்னேனா, எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டேனா? எதுவுமே நான் செய்யவில்லை.
கையை இப்படி (கும்பிடுவது போல்) வைத்து கொண்டு காருக்குள் அமர்ந்து இருந்தேன். இது எப்படி பிரசாரமாகும்? கண்டிப்பாக இது பிரசாரம் ஆகாது. இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்துவிட்டு வேட்பாளர் வீட்டுக்கு செல்கிறார். இரவு 10.30 மணிக்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடிக்க கூடாதா?. நீங்கள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறீர்கள்'' என ஆக்ரோஷமாக பேசினார்.
மேலும் பாஜகவினர் அண்ணாமலைக்கு ஆதரவாக சூலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சூலூரில் இரவில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பதற்றமான சூழல் நிலவியதால் கூடுதல் போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் நேற்று இரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications