கோவையை காப்பாற்றுங்க.. உடனே டீம் அனுப்புங்க.. டெல்லிக்கு லெட்டர் எழுதிய வானதி சீனிவாசன்
கோவை: மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழு அமைத்து கோவையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
முதல் அலையில் கொரோனா வைரஸ் தொற்றை வேகமாக தடுப்பதில் முன்மாதிரியாக கோவை மாவட்டம் இருந்தது.ஆனால் இரண்டாவது அலையில் சென்னையை முந்தி பாதிப்பில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அறிக்கையின் படி நேற்று 3,561 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4,268 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 8ம் தேதியில் இருந்து குறைய தொடங்கிய கொரோனா, கோவையில் 8ம் தேதிக்கு பிறகு படிப்படியாக உயரத்தொடங்கியது. 2ஆயிரத்திற்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 4ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கோவையில் பாதிப்பு
தற்போதைய நிலையில் ஆக்சிஜன் தேவையும், தடுப்பூசி, பெட் வசதிகள் அதிகம் தேவைப்படும் நகராக கோவை மாறி உள்ளது. சுற்றியுள்ள 8 மாவட்டங்களுக்கு மருத்துவ தலைநகரமாக விளங்கும் கோவை, கொரோனா பாதிப்பில் இருந்து மீள, தமிழக அரசு தற்போது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் செயல்படுகிறது.

தடுப்பூசி அனுப்புங்கள்
இந்த சூழலில் மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழு அமைத்து கோவையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 10 நாட்களில் கோவையில் நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. நோய் தொற்று விகிதத்திற்கும், தடுப்பூசி விகிதத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. தடுப்பூசி பத்து சதவீதத்திற்கும் கீழான மக்களுக்கு மட்டுமே சேர்ந்துள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

மக்கள் அதிகம்
கொரோனா இரண்டாவது அலையில் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கோவையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தொழில்துறையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தடுப்பூசி போடுவதற்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அனுப்புங்க
கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது . எனவே, தமிழக அரசுக்கு உதவுவதற்கும், நெருக்கடியை திறன்பட கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications