இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் ரூ.37 திருடிய வீட்டை கண்டுபிடித்து கோவை தொழிலதிபர் செய்த செயல்.. செம
கோவை: இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டில் 37 ரூபாய் 50 காசு திருடிய 10 வயது சிறுவன் தற்போது கோவையில் தொழிலதிபராக உள்ளார். இந்த திருட்டு சம்பவம் அவரது மனதை உறுத்திய நிலையில் அந்த வீட்டின் வாரிசுகளை தேடிக்கண்டுபிடித்து ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பணியாளர்களாக இருந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி எழுவாய். இவர்கள் 2 பேரும் 1970 ம் ஆண்டில் அங்கிருந்த வீட்டை காலி செய்தனர்.

வீடு காலி செய்தபோது உதவிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்தனர். ரஞ்சித் அந்த தம்பதிக்கு உதவி செய்தார்.
இந்த சமயத்தில் தலையணைக்கு அடியில் 37 ரூபாய் 50 காசு இருந்ததை ரஞ்சித் பார்த்தார். தனது குடும்பம் வறுமையில் வாடியதை நினைத்த அவர் சுப்பிமணியம் - எழுவாய் தம்பதிக்கு தெரியாமல் ரூ.37.50யை திருடி வைத்து கொண்டார். அதன்பிறகு 1977ம் ஆண்டில் தனது 17 வயதில் ரஞ்சித் பிழைப்பு தேடி தமிழகம் வந்தார்.
கோவையில் அவர் பல்வேறு பணிகளை செய்தார். வறுமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது தொழிலதிபராக உள்ளார். ரஞ்சித் தற்போது கோவையில் கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருப்பினும் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதி வீட்டில் 37.50 காசு திருடிய சம்பவம் உறுத்தி கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று ரஞ்சித் முடிவு செய்தார்.
இதையடுத்து சுப்பிமணியம் - எழுவாய் தம்பதி பற்றி அவர் விசாரித்தார். அப்போது அந்த தம்பதி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சமீபத்தில் இலங்கை சென்ற ரஞ்சித் அங்கிருந்த சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் 3 மகன்களின் குடும்பத்துக்கு தலா ரூ.70 ஆயிரம் வழங்கினார். அதோடு புத்தாடைகளும் வாங்கி கொடுத்தார்.

மேலும் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் மகள் செல்லம்மாள் திருச்சியில் இருப்பதை அறிந்த ரஞ்சித் அங்கு சென்று அவருக்கு புத்தாடை வழங்கியதோடு ரூ.70 ஆயிரத்தை வழங்கினார். இப்படியாக இலங்கையில் திருடிய 37.50 ரூபாய்க்காக 50 ஆண்டுகள் கழித்து பணத்தை இழந்த தம்பதியின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்தை ரஞ்சித் வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
இதற்கிடையே தான் கோவையில் உள்ள ரஞ்சித்தை, சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி சந்தித்து நன்றி கூறினார். அப்போது அவர், ‛‛அவர் (ரஞ்சித்) வீட்டில் காசு எடுத்ததாகவும், அதனை திரும்ப தருவதாகவும் கூறினார். அதை கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா? ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்றார்.
இதுதொடர்பாக ரஞ்சித் கூறுகையில், ‛‛நான் பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்த தருணம் எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவருக்கொருவர் பார்த்தபோது பண சந்தோஷத்தை விட.. மன சந்தோஷம் ஜாஸ்தியாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எனக்கு கடன் என்று யாரிடமும் இருக்க கூடாது. இதனால் தான் பணத்தை தேடி கொண்டு போய் கொடுத்தேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications