"குழந்தையை பார்த்துக்கோ".. இன்ஜினியர்! கோவை தீவிரவாதி முபின் யார்? பிரைன் வாஷ் செய்யப்பட்டது எப்படி?
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமேசா முபின் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது.
அமைதியை குலைக்கும் வகையில் தீபாவளிக்கு முன்பாக திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சரியாக கோவிலுக்கு முன் கார் வெடித்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

குண்டுவெடிப்பு
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், குண்டுவெடிப்பிற்கு காரணமான தீவிரவாதி ஜமேசா முபின் குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதி ஜமேசா முபின் உக்கடம் பகுதியை சேர்ந்தவர். இவர் என்ஐஏவின் வாட்ச் லிஸ்டில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர்/ கேரளா ஐஎஸ்ஐஎஸ் மாடலில் இவர் தொடர்பு கொண்டவர் என்று சந்தேகிக்கப்பட்டார். ஏற்கனவே 2019ல் இவரை என்ஐஏ விசாரணை செய்து பின்னர் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
ஜமேசா முபின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த துறையில் வேலை பார்க்காமல் சில நாட்கள் புத்தகம் விற்கும் பணிகளை செய்து இருக்கிறார்.அதன்பின் துணி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் மூளை சலவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்மூலம்தான் இவர் குண்டு வெடிப்பிற்கு திட்டம் போட்டு இருக்கிறார்.

யார் இந்த ஜமேசா முபின்?
ஜமேசா முபின் பொதுவாக யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் குழுக்கள், இஸ்லாமிய கூட்டங்களிலும் கூட இவர் கலந்து கொள்ள மாட்டார். முக்கியமாக இஸ்லாமிய ஜனநாயக அமைப்புகள் மீது இவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளை இவர் மோசமாக விமர்சனம் செய்து வந்து இருக்கிறார். இஸ்லாமிய அரசியல் கட்சிகள் எல்லாம் வேஸ்ட் என்பது போல அடிக்கடி இவர் கமெண்ட் செய்து வந்துள்ளார்.

படித்தது என்ன?
ஜமேசா முபின் கடந்த சில வருடங்களுக்கு முன் மசூதியில் முகமது அசாருதீன் என்பவரை சந்தித்து இருக்கிறார். அவர்தான் ஜமேசா முபினை மூளை சலவை செய்து இருக்கிறார். முகமது அசாருதீன் வாஹாதத் இ இஸ்லாமி என்று தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர். இவர் மத ரீதியான பிரச்சாரங்களை மசூதிகளில் நடத்தி வந்து இருக்கிறார். இந்த அசாருதீன் கடந்த 2017ல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

யார் இவர்?
தமிழ்நாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் கிளையில் இவர் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்த அசாருதீன்தான் நிறைய பிரச்சாரங்களை செய்து பல இளைஞர்களை தங்கள் குழுவில் சேர்த்து இருக்கிறார். அப்படித்தான் ஜமேசா முபின் இந்த குழுவில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு போல இங்கே நடத்த வேண்டும் என்று இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு உள்ளனர். முக்கியமாக இலங்கையை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இவர்கள் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்.

வீடியோக்கள்
அவர்களின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து உள்ளனர். இந்த வீடியோக்கள், அசாருதீன் எடுத்த வகுப்புகள் மூலம்தான் ஜமேசா முபின் மூளை சலவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2019ல் இலங்கை குண்டுவெடிப்பிற்கு பின் முகமது அசாருதீன் தான் கைது செய்யப்படலாம் என்று நினைத்து இருக்கிறார். ஜமேசா முபின் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் முகமது அசாருதீன் இதை சொல்லி இருக்கிறார். அதேபோல் இலங்கை குண்டுவெடிப்பிற்கு பின் இவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ஐஏ
அப்போதுதான் ஜமேசா முபின் என்ஐஏ மூலம் 2019ல் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். ஆனால் இவருக்கு எதிராக பெரிதாக ஆதாரம் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால் அவர் அப்போது விடுதலை செய்யப்பட்டார். ஆனால் வாட்ச் லிஸ்டில் மட்டும் வைக்கப்பட்டு வந்தார். என்ஐஏ மூலம் ஜமேசா முபின் முதல்முறை விசாரிக்கப்பட்ட பின் உள்ளூவர் ஜமாஅத் நிர்வாகிகள் இவரை அழைத்து அறிவுரை கூறி உள்ளனர். அதோடு இவரை திசை மாற்றி நல்ல வழிக்கு கொண்டு செல்ல, தங்கள் வகுப்பிற்கு வரும்படியும் கூறி உள்ளனர்.

ஜனநாயக அமைப்பு
ஆனால் அது போன்ற ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையை ஜமேசா முபின் கொண்டிருக்கவில்லை. ஜமேசா முபின் மத்திய மற்றும் மாநில உளவுத்துறையில் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தீபாவளிக்கு முதல்நாள் வெடிப்பிற்கு முன்புதான் மாநில உளவுத்துறை மூலம் இந்த குழு பற்றி எச்சரிக்கை சென்றுள்ளது. ஆனாலும் போலீசார் இதை மிஸ் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மனைவி
இந்த சம்பவத்திற்கு முன்பாக ஜமேசா முபின் தனது மனைவி, குழந்தைகளை அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். நான் பிஸ்னஸ் வேலை ஒன்றிக்காக வெளியே செல்கிறேன். சில நாட்கள் வர மாட்டேன். குழந்தைகளை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார். இவர் தீவிரவாத தாக்குதல் திட்டத்தில் இருந்தது அவரின் மனைவிக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கேரளா சென்று சில தீவிரவாதிகளை சந்தித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications