கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என் மகனுக்கு எதுவும் தெரியாது-அல் உம்மா பாட்ஷா தம்பி மனைவி
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் என் மகனுக்கு தெரியாது என்று கைது செய்யபப்ட்டுள்ள முகமது தல்காவின் தாயார் ஹஃப்சத் பீவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக பயங்கர சப்தத்துடன் கார் வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என தெரியவந்தது. முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. முபின் கூட்டாளிகள் என மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்ஷா தம்பி மகன்
இதில் 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாஸின் மகன் முகம்மது தல்காவும் ஒருவர். இதனால் கோவையில் மீண்டும் 1998-ம் ஆண்டு போல மிகப் பெரிய நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகங்களும் எழுந்தன. தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

மகன் நிரபராதி
இந்நிலையில் முகம்மது தல்காவின் தாயார் ஹஃப்சத் பீவி, இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில் மகன் நிரபராதி என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஹஃப்சத் பீவி கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக சிறைக்கும் வீட்டுக்குமாக நடந்து வருகிறேன். என் மகன் கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் கமிஷன் தொகைதான் என் மகனுக்கான வருவாய் ஆதாரம்.

கார் வாங்கி விற்பனை
அப்படி வாங்கிக் கொடுத்த கார் ஒன்று முபின் வீட்டில் இருந்துள்ளது. அதுதான் என் மகன் செய்த தவறு. அதனைத் தவிர பயங்கரவாத சம்பவங்களில் எந்த தொடர்பும் என் மகனுக்கு கிடையாது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளால் என் மகனின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.

தவறான சித்தரிப்பு
தொலைக்காட்சிகளில் என் மகனை குற்றவாளியாக காட்டுகின்றனர். என் மகன் உண்மையிலேயே தவறு செய்திருந்தால் அவனை நீங்கள் தண்டிக்கலாம். ஆனால் என் மகனை குற்றவாளியாகவே சித்தரித்து காட்டுகின்றனர். இவ்வாறு தல்காவின் தாயார் ஹஃப்சத் பீவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications