"எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்".. கோவை கார் வெடிப்பு! அந்த வாட்ஸப் ஸ்டேட்டஸில் இருந்தது என்ன?
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமேசா முபினின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஸ்டேட்டஸ் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். அந்த ஸ்டேட்டஸில் அப்படி என்ன இருந்தது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. சரியாக கோவிலுக்கு முன் கார் வெடித்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அமைதியை குலைக்கும் வகையில் தீபாவளிக்கு முன்பாக திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

கோவை
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்ட சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். இதை சிலிண்டர் வெடிப்பு என்று கூறி மறைத்து வருகின்றனர். ஜமேசா முபின் என்பவர்தான் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் ஆனவர். அவர் இதை பற்றி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் கூட வைத்து இருக்கிறார்.

அண்ணாமலை
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்.

குண்டு வெடிப்பு
இதன் அடிப்படையில்தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். உளவுத்துறை இந்த விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டது. மொத்தம் 5 பேரை இதில் கைது செய்துள்ளனர். சிலிண்டரை தூக்கி சென்ற காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை இதில் கைது செய்துள்ளனர். இன்னும் 3 பேரை அதிகார்பூர்வமற்ற முறையில் கைது செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பை தடுக்க போலீசார் தவறிவிட்டனர், என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

ஸ்டேட்டஸ்
இந்த நிலையில் அண்ணாமலை குறிப்பிட்ட இந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் உண்மைதான் தி வீக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் காரை வெடிக்க வைத்த ஜமேசா முபினுக்கு தான் இறக்க போவது முன்பே தெரியும் என்று கூறப்பட்டு உள்ளது. தான் செய்வது தவறும் என்றும், தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னுடைய குறைகளை மறக்க வேண்டும் என்றும் அவர் நினைத்துள்ளார். இதை மனதில் வைத்தே அவர் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் செய்துள்ளார்.

என்ன இருந்தது?
அந்த ஸ்டோரி ஒரு கருப்பு நிற பேக் கிரவுண்ட் கொண்ட இமேஜ் ஆகும். அதில்தான் தன்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதி இருந்தது. இதைத்தான் முபின் பகிர்ந்து இருக்கிறார். இந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸைதான் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் இந்த குண்டுவெடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications