SIR.. 2002,2005 வருட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள்.. இன்றும் நாளையும் மிஸ் பண்ணிடாதீங்க
கோவை: SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002,2005 -ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இன்று, நாளை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் முழுமையான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறை -2026 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கீட்டு படிவத்தை வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002,2005 -ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள். இந்த பணிக்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த முகாமில் வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்திட பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவர். மேலும், வாக்காளர்கள், அவர்களது தாய் -தந்தை அல்லது தாய், தந்தையரின் பெற்றோர் ஆகியோரது பெயர்கள் கடந்த 2002,2005 -ம் ஆண்டு தீவிர திருத்தப் பட்டியலின் போது இடம் பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை கண்டறியவும் உதவி செய்வர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் https://voters.eci.gov.in// என்ற இணையதள வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications