கையில் பெப்பர் ஸ்ப்ரேவுடன் களமிறங்கிய வானதி.. கோவை மாணவிக்காக பாஜக ஆர்ப்பாட்டம்
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கோவை பாஜக சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைகளில் தீப்பந்தம், பெப்பர் ஸ்ப்ரே ஏந்தி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அந்த கும்பல், ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டனர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்
இதுதொடர்பாக மாணவியின் ஆண் நண்பன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 7 தனிப்படைகள் அமைத்து அந்த 3 நபர்களை தேடி வருகிறார்கள்.
காவல்துறை மற்றும் திமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று மதியம் சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். பாஜக சார்பில் பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பர் குடும்பத்திற்கு நேரடியாக ஆறுதலும் சொல்லப்பட்டது.
பெப்பர் ஸ்ப்ரேவுடன் ஆர்ப்பாட்டம்
மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கையில் தீப்பந்தம் மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திமுக மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பகுதியில் சட்ட விரோதமாக மதுபான பார் கடை இயங்கி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளோம். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை என்கவுன்டர் நடவடிக்கை எடுத்து முடித்து விடுகிறார்கள்.
பெண்கள் பாதுகாப்பு
இந்த வழக்கையும் என்கவுண்டர் என்று மூடி மறைக்க கூடாது. குற்றதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் தீர்வு. காவல்துறையின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இரண்டு இளைஞர்கள் யார். காவல்துறை அவர்களின் பெயரை செய்தி குறிப்பில் ஏன் போடவில்லை. கோவையில் டேட்டிங் செயலி மோசடி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டும்.
அந்த செயலி குறித்து மத்திய அரசிடம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீது வன்கொடுமை அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு டிராமா செய்ய நேரம் உள்ளது. குடும்பத்தை பார்க்க நேரம் உள்ளது. பெண்களை பார்க்க நேரம் இல்லை.. பெண்களுக்கு ஆயிரம் கொடுத்தால் மட்டும் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். ஆட்சியில் இருக்கும் நான்கு மாதங்களாவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். "என்றார்.












Click it and Unblock the Notifications