கோவை டெலிவரி ஊழியர்கள் இனி சாலையில் காய வேண்டாம் – ஏசி வசதியுடன் செம ரெஸ்டிங் பாயின்ட்
கோவை: கோவை மாநகரில் மட்டுமே உணவு, அத்தியாவசிய பொருட்கள் டெலிவரி செய்ய பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வெயில், மழை காலங்களில் அவர்கள் சாலையில் சிரமப்படுகிறார்கள். அவர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி ஏசி வசதியுடன் கூடிய இரண்டு கூடங்களை கட்டியுள்ளது. இது விரைவில் திறக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக வளரும் மாநிலங்களில் கோவை முக்கிய இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயரெடுத்துள்ள கோவை, இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்து, 30 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

டெலிவரி ஊழியர்கள்
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அதிகளவு வந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் கோவைக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். நகரம், கிராமம் இரண்டு சூழல்களையும் கோவை கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் கோவையின் கிளைமேட்டும் ரம்மியமாக இருக்கும்.
இதனால் பணி ஓய்வு பெற்ற அரசுப்பணியாளர்கள், முதியவர்களும் கோவையில் குடிபெயர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக மக்களின் நுகர்வும் அதிகளவு உள்ளது. உணவு, அத்தியாவசிய பொருட்கள் தேவை அதிகமாக இருக்கிறது. கடைகள் ஏராளமாக இருந்தாலும் மக்கள் இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் மூலம் அதிகளவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடும் சிரமம்
ஸ்விகி, ஜொமேட்டோ, அமேசான், பிளப்கார்ட், ஜியோ மார்ட், ஜெப்டோ, பிளிங்கிட் மாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி கோவை டெலிவரி ஊழியர்கள் என்றழைக்கப்படும் உள்ளூர் டெலிவரி நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று பல தரப்பினர் பணியாற்றுகிறார்கள்.
வெயில், மழை, குளிர், பண்டிகை நாட்கள் எதுவாகினும் அவர்கள் பணியில் தான் இருப்பார்கள். தமிழில் இவர்களை இணையத் தொழிலாளர்கள் என்றழைப்பார்கள். டெலிவரி இல்லாத நேரங்களில் அவர்கள் வெயிலில் தான் காத்துக் கிடக்க வேண்டும். சில நேரங்களில் தண்ணீர் குடிப்பதோ, இயற்கை உபாதைகள் கழிப்பது கூட சிரமமாக தான் இருக்கும்.
ஓய்வு கூடம்
இதை உணர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெலிவிரி ஊழியர்கள் ஓய்வு எடுக்க இணைய தொழிலாளர் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளான காந்திபுரம், ஆர்எஸ்புரம் ஆகிய 2 பகுதிகளில் டெலிவரி ஊழியர்களுக்கான ஓய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்புரம் டிபி ரோட்டிலும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிர் சாதன வசதியுடன் 20 ஊழியர்கள் அமரும் வகையில் இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாயின்ட்கள், எல்இடி விளக்குகள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலவசம்
மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் வீல் சேர்கள் செல்வதற்காக பிரத்யேக ஏறு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நேரத்தில் சுமார் 20 ஊழியர்கள் இந்த கூடத்தை பயன்படுத்தலாம். இதற்கு அவர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம். இலவசமாகவே பயன்படுத்தலாம். பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த 2 கூடம் விரைவில் திறக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications