சினிமா ஸ்டைலில்.. ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. கோவையில் "கேங்க்-வார்".. வசமாக சிக்கிய தாதா!
கடந்த சில மாதங்களாக இந்த கேங் வார் உச்சத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ரவுடி ஒருவரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையிலேயே போலீசார் நடத்திய இந்த ஆபரேஷன் அங்கே ரவுடிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி சஞ்சய் ராஜா. இவர் கரட்டுமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
ரவுடியான இவர் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, தாக்குதல், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். அங்கே இருக்கும் சில அரசியல் தலைகளின் தயவால் போலீசார் இவர் வளர்ந்த போதே அடக்கி ஒடுக்காமல் இருந்துள்ளனர்.

கொலை
இந்தநிலையில்தான் துளிர்விட்டு போன சஞ்சய் தனது ரவுடித்தனத்தை பொதுமக்களிடமும் காட்ட தொடங்கி உள்ளார். கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்த இன்னொரு ரவுடி சத்யா என்னும் சத்யபாண்டி. இவரின் கேங்கிற்கும் சஞ்சய் கேங்கிற்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இரண்டு தரப்பும் பொதுவில் மாறி மாறி அடித்துக்கொள்வதும், சண்டை போட்டுக்கொள்வதும் வழக்கம். ஏற்கனவே சத்யா பல்வேறு கொலைகளை செய்து உள்ளார். இவர் மீது மதுரை, கோவையில் கொலை வழக்குகள் உள்ளன.

சண்டை
கடந்த சில மாதங்களாக இந்த கேங் வார் உச்சத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கேங் வார் முற்றவே இரண்டு தரப்பும் மாறி மாறி கடந்த 12ம் தேதி அடித்துக்கொண்டது. நடுரோட்டில் சத்யாவை சஞ்சய் வெட்டி கொலை செய்துள்ளார். அதோடு சத்யாவை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். அவரிடம் சீன துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்துதான் சஞ்சய் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர். அதில் சஞ்சய் மீதும் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 பேரும் 3 நாட்களுக்கு முன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் எழும்பூர் கோர்ட்டிலும், அரக்கோணம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

போலீஸ் கஸ்டடி
இவர்களிடம் விசாரணை போலீசார் இவர்களை கஸ்டடியில் எடுத்தனர். இதையடுத்து கோவைக்கு அழைத்துவந்து சஞ்சய் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அவர் தன்னிடம் சீன துப்பாக்கிகள் இருப்பதாக கூறி உள்ளார். அதோடு எங்கே என்னென்ன குற்றங்களை செய்தேன் என்றும் கூறி இருக்கிறார். இதையடுத்து இன்று அதிகாலை சஞ்சயை போலீசார் சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதோடு அவரின் சீன துப்பாக்கிகளையும் வீட்டில் சென்று பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி சூடு
இந்த நிலையில் துப்பாக்கியை வாங்கிவிட்டு திரும்பி வருகையில் சஞ்சய் தப்பி ஓட முயன்று உள்ளார். முக்கியமாக போலீசாரை அடித்து தள்ளிவிட்டு விலங்கோடு தப்பியோட முயன்று உள்ளார். இதையடுத்து போலீசார் அவரின் காலில் சுட்டு அவரை பிடித்தனர். அவரின் இடதுகாலில் சுட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சாம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கி சூடு அங்கே ரவுடிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியிசத்தை ஒழிக்க போலீசார் அதிரடி பாதையை தேர்வு செய்துள்ளதால் ரவுடிகள் அச்சத்தில் மூழ்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications