அமெரிக்க டாலரில் லாபம்..எக்கச்சக்க பரிசுகள்.. கிரிப்டோ கரன்சி மூலம் கொங்கு மண்டலத்தை அதிரவைத்த மோசடி
கோவை: கிரிப்டோ கரன்சி பெயரை பயன்படுத்தி கோவை பிரமுகர் மாநிலம் முழுவதும் 1,000 கணக்கானோரை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அமெரிக்க டாலரில் முதலீடு, பல மடங்கு லாபம், ஸ்டார் ஹோட்டலில் விருந்து, தங்க நெக்லஸ், செயின் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி சதுரங்க வேட்டை பாணியில் மக்களின் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தது தொடர்பாக கோவை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தின் மரியாதையான தமிழ் எவ்வளவு பிரபலமோ, அதேபோல பல நூதன மோசடிகளும் அந்தப் பகுதியில் அதிகளவு நடைபெறும். ஈமுகோழி, எம்எல்எம் என்று பரிணாமித்து தற்போதைய கிரிப்டோ கரன்சி வரை ஏராளமான மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. சென்னைக்கு அடுத்து சைபர் க்ரைம் புகார்கள் அதிகம் பதிவாவது கோவை மாநகரில் தான்.

கிரிப்டோ கரன்சி முதலீடு
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம் என்று வந்த வாட்ஸப்பில் வந்த தகவலை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் என்பவர் கிரிப்டோ கரன்சிக்காக GROKR என்ற செயலியை தொடங்கியுள்ளார். அதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் என வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பியுள்ளனர்.
இதை நம்பி முதலீடு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சொன்னபடி பணம் தராமல், திடீரென ஆப்பின் செயல்பாட்டையும் நிறுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கோவை சைபர் க்ரைம் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
அதிக லாபம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், அமெரிக்கா நிறுவனம் என்பதால் பணத்தை டாலரில் முதலீடு செய்ய வேண்டும் என்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் 1,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை முதலீடு செய்தோம். ஆரம்பத்தில் சிறிது காலம் மட்டும் லாபத்தை டாலராகவே கொடுத்து வந்தனர். ஆனால் லாபத்தை மீண்டும் முதலீடு செய்ய அறிவுறுத்தினார்கள். அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் முதலீடு செய்தோம்.
பரிசு..மோசடி
புதிய முதலீட்டாளர்களை இணைத்துவிட்டால் 100-1,000 டாலர் ஊக்கத் தொகை வழங்குவோம் என்று நட்சத்திர உணவகங்களுக்கு அழைத்து சென்று விருந்து அளித்துள்ளனர். கூடுதலாக பெண்களை ஈர்ப்பதற்காக தங்க நெக்லஸ், செயின் வழங்குவோம் என பல திட்டங்களை விளம்பரப்படுத்தினார்கள். இதனால் பெண்களும் ஏராளமானோர் முதலீடு செய்தனர். திடீரென செயலி முடங்கிவிட்டது. எங்களால் லாகின் செய்ய முடியவில்லை.
முதலீடு, லாபமாக வந்த பணம் எதையும் எடுக்க முடியவில்லை. ஹேமந்தை தொடர்பு கொண்டபோது பதில் கூறவில்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடி ஏதாவது சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இதில் முதலீடு செய்தோம். சிலர் இதில் போட்ட பணத்தை எடுத்துள்ளனர். பலர் இவர்களை நம்பி ஏமாளியாகி கைக்காசையும் இழந்து, கடன்காரர்களாக நிற்கிறோம். காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். என்றனர்.












Click it and Unblock the Notifications