கோவையில் சிக்கிய பாட்ஷா தம்பி மகன் முகமது தல்கா! 59 பேரை பலிகொண்ட 1998 கோவை குண்டுவெடிப்பின் 'மூளை'!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபினின் கூட்டாளிகளில் ஒருவரான போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது தல்கா உள்ளிட்டோரின் கேரளா தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. போலீசிடம் சிக்கிய முகமது தல்கா, 1998-ம் ஆண்டு கோவையில் 59 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையான அல் உம்மா இயக்க நிறுவனர் பாட்ஷாவின் தம்பி நவாஸின் மகன் என போலீசார் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இது முதலில் காரில் இருந்த சிலிண்டர்கள் வெடித்த ஒரு தற்செயல் விபத்தாகவே கூறப்பட்டது.

சதிச் செயலா?
பின்னர் கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவர் ஜமேசா முபின் என்றும் அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சிக்கியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் வெடித்து சிதறிய கார் சிலிண்டருடன் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் இருந்ததும் அம்பலமானது.

கூட்டாளிகள் 5 பேர் கைது
இதனால் மிகப் பெரும் நாசவேலைக்கு ஜமேசா முபின் திட்டமிட்டிருந்தாரா? என்கிற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முபினின் கூட்டாளிகள் என போலீசார் அறிவித்துள்ளனர். இந்த 5 பேரில் ஒருவர்தான் முகமது தல்கா.

பாட்ஷா தம்பி மகன் கைது
முகமது தல்காவின் தந்தை பெயர் நவாப். 1998-ம் ஆண்டு இந்தியாவையே அதிரச் செய்த கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்தவர் அல் உம்மா எனும் பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் எஸ்.ஏ. பாட்ஷா. அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர்- தம்பிதான் நவாப்.

பாட்ஷா தம்பி வீட்டில் ரெய்டு
அல் உம்மா பாட்ஷாவின் தம்பி நவாப்பிம் மகன் முகமது தல்காவுக்கும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதால் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக பாட்ஷாவின் தம்பி நவாப் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே கோவை சம்பவத்தில் இறந்த முபின், கேரளா சிறையில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீனை சந்தித்தாரா? எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது அசாருதீன் கைது செய்யப்பட்டார். அப்போதும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் ஜமேசா முபின் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications