கோவை உப்பிலிப்பாளையம் மேம்பாலம்.. 50 ஆண்டு காலத்திற்கு பிறகு பிறக்க போகும் விடிவு
கோவை: கோவை மாநகரில் உப்பிலிபாளையம் மேம்பாலம் எல்பிஜி டேங்கர் சரிந்து விழுந்ததில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அவிநாசி ரோட்டை இணைக்கும் இந்த பழைய மேம்பாலம் மிகவும் குறுகிய வடிவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் இந்த மேம்பாலத்தை அதிகமாக பயன்படுத்தும் நிலையில், விபத்து அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் உப்பிலிபாளையம் மேம்பாலம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கோவைக்குள் நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. அதில் 18 டன் சமையல் கியாஸ் நிரம்பி இருந்தது. அந்த டேங்கர் லாரி கோவை கணபதி அருகே எப்.சி.ஐ. குடோன் சாலையில் உள்ள பாரத் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதிகாலை 3.15 மணியளவில் உக்கடம் மேம்பாலத்தை கடந்து ஒப்பணக்காரவீதி வழியாக அவினாசி சாலையில் உள்ள உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தில் டேங்கர் ஏறியது. அந்த லாரி மேம்பாலத்தின் மத்தியில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்தது.

அப்போது லாரியின் முன்பகுதியையும், டேங்கரையும் இணைக்கும் வகையில் இருந்த (டேர்ன் பளேட் பின்) இரும்பு அச்சு திடீரென்று உடைந்தது. இதனால் லாரியுடன் இணைந்து இருந்த கியாஸ் நிரம்பிய டேங்கர் மட்டும் தனியாக கழன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த விபத்தால் கேஸ் கசிந்தது. ஆனால் நல்லவேளையாக பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் உப்பிலிப்பாளைம் மேம்பாலம் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.
50 ஆண்டுகள் பழமையான மேம்பாலமான உப்பிலிப்பாளைம் மேம்பாலம் மிக சிறிய அளவில் ரவுண்டா வடிவில் இருக்கும். இந்த பாதையைத்தான் ரயில்வே கிராசிங்கை கடக்க கனரக வாகனங்களும் பயன்படுத்துகின்றன. நேற்றைய விபத்தை தொடர்ந்து மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் மேம்பாலத்தை அகலப்படுத்த முடிவு செய்துள்ளது.
டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவை கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை (சாலைப் பாதுகாப்பு) கோட்டப் பொறியாளர் ஜி.மனுநீதி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைதுறை பொறியாளர் ஜி.மனுநீதி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அதிர்ஷ்டவசமாக பாலத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. 50 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் நன்றாக உள்ளது. மேம்பாலத்தை விரிவுபடுத்த கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னதாக, நெடுஞ்சாலைத் துறையின் சிறப்புத் திட்டப் பிரிவினர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்" என்றார்.
இதுபற்றி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறுகையில், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் விரிவாக்கத்திற்கான பாதுகாப்பு தணிக்கை நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்தாமல் மேம்பாலத்தின் ஒரு பக்கத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட சாலை பாதுகாப்பு குழு முன்மொழிந்து, உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு இந்த பணிகளை மேற்கொள்ள உளளது. நாங்கள் தொடர்ந்து மேம்பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம்," என்றார்.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவின் மூத்த அதிகாரி கூறும் போது, "உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தை வலுப்படுத்துவது மற்றும் அகலப்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதற்கு இன்னும் அனுமதி பெறவில்லை. உக்கடம் காவல் நிலையம் அருகே உள்ள உக்கடம் மேம்பாலத்தில் இருந்து ஒப்பணகார தெரு வழியாக மில் சாலை வரையிலான 1.2 கி.மீ நீளத்திற்கு அகலமான பாலம் கட்டப்படும். இதற்கு 20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே கிருஷ்ணசாமி சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வளைவு மற்றும் குட்ஷெட்ஸ் சாலையை நோக்கி செல்லும் பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் ரவுண்டானாவைச் சுற்றியுள்ள இந்த சாலையை விரிவுபடுத்த ₹60 லட்சம் முதல் ₹70 லட்சம் வரை முன்மொழிவு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications