கோவை மாவட்ட பாஜக தலைவர் திடீர் விலகல்.. சட்டென ஓகே சொன்ன அண்ணாமலை.. என்ன காரணம்?
கோவை: கோவை மாவட்ட பாஜக தலைவராக இருந்த பாலாஜி உத்தம ராமசாமி, திடீரென அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் புதிய தலைவரையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். திடீரென பாலாஜி உத்தம ராமசாமி பதவி விலக என்ன காரணம் என்ற கேள்விகள் எழுகிறது.
கோவை மாவட்ட பாஜக தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி, திடீரென பதவி விலகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வலுவாக உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக கோவையைத்தான் சொல்ல வேண்டும். கோவையில் ஆரம்ப காலம் முதலே பாஜக செல்வாக்குடன் இருக்கிறது.

கோவை மாவட்ட பாஜக தலைவராக உள்ள பாலாஜி உத்தம ராமசாமி, திமுகவின் முக்கிய தலைவர்களான உதயநிதி ஸ்டாலின், ஆ ராசா, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து போராட்டங்களை நடத்தி வந்தவர். கோவையில் கடந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கும் திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக பாலாஜி உத்தம ராமசாமி கைதும் செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமினில் வெளியே வந்தார். உதயநிதிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.
கோவையில் அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்த போது மிகப்பெரிய அளவில் கூட்டங்களை திரட்டி, பாதயாத்திரை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி இருந்தார். அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராகவும் பாலாஜி உத்தம ராமசாமி இருந்தார். இந்த சூழலில் திடீரென பாலாஜி உத்தம ராமசாமி தன்னை பதவியிலிருந்து விடுவிக்குமாறு பாஜக மாநிலத் தலைமைக்குக் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது
இது ஒருபுறம் எனில் அவரது கடிதத்தை உடனே ஏற்றுக் கொண்ட பாஜக மாநிலத் தலைமை கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக ரமேஷ்குமார் என்பவரை நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணி ஆற்றி வந்தார். தற்பொழுது, சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.
அவருடைய கடிதத்தினை ஏற்றுக் கொண்டு இன்று (நவ.26) முதல் மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய கோவை மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்" என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாலாஜி உத்தம ராமசாமி விலகலுக்கான காரணம் வெளிப்படையாக தெரியவில்லை..












Click it and Unblock the Notifications