கோவையில் இன் சார்ஜ் ஏற்ற அமைச்சர் முத்துசாமி! வண்டியை வால்பாறை விடுப்பா! ஆரம்பமே அதிரடி!
கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள முத்துசாமி தனது களப்பணியை தொடங்கிவிட்டார். வயது 80ஐ தொட்டுவிட்டது, இவர் எங்கே ஆக்டிவாக செயல்படப் போகிறார் என நினைத்தவர்களை முதல் நாளே வியக்க வைத்துள்ளார்.
வால்பாறையில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நேராக மலையேறி விட்டார் முத்துசாமி. ஈரோட்டிலிருந்து கோவை வந்து செல்வதற்கே நேரம் போதாது, இவர் எங்கே வால்பாறை வரப் போகிறார் என நினைத்த அதிகாரிகளுக்கும் அவரது சுறுசுறுப்பு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

இதனிடையே வால்பாறையில் தாம் ஆய்வு செய்ய செல்வதற்கு முன்பாகவே அங்கு அனைத்துத் துறைகள் சார்பில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகளை கண்டு கலெக்டரை அழைத்து பாராட்டினார் அமைச்சர் முத்துசாமி.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், ஜெயலலிதா ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர், இப்போது ஸ்டாலின் ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் என அரசியலில் நீண்டதொரு அனுபவம் வாய்ந்தவர் முத்துசாமி. செந்தில்பாலாஜி ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே முத்துசாமி அமைச்சராக இருந்தவர் என்பதும் அவருக்கு தெரியாத அரசியல் எதுவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமிக்கே அரசியல் குருநாதர் முத்துசாமி தான். இந்த நன்றிக்காக தான் மூன்றாண்டுகளுக்கு முன்னர் முத்துசாமி மனைவி மறைந்த போது எடப்பாடி பழனிசாமி முத்துசாமியின் இல்லம் தேடிச்சென்று ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார். இதனால் கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதில் அமைச்சர் முத்துசாமி தெளிவாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications