அடுத்தகட்ட தொழில் வளர்ச்சியை நோக்கி கோவை மாவட்டம்.. அமைச்சர் அன்பரசன் கொடுத்த சூப்பர் அப்டேட்
கோவை: கோவை கொடிசியாவில் நடைபெற்ற சர்வதேச வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் 115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றும், இது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை விட அதிகம் என்றும் சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், கொடிசியா வர்த்தக அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக, சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தொழில் முனைவோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: மாநிலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்டார். இந்நிகழ்ச்சியில் 115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 17 முதல் முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 46 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் ஏற்கப்பட்டன. அதற்கு அடுத்த கட்டமாக கோவையில் நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சியில் 115 கோடி ரூபாய் அமெரிக்க டாலருக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவை மாநிலத்தின் எம்எஸ்எம் இ தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான மானியம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் என பல்வேறு திட்டங்களை எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு தொழில் முனைவராக முப்பதாயிரத்திற்கு மேற்பட்டோரை உருவாக்கி இருக்கிறது.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த 1,958 பேருக்கு 453 கோடி கடன் உதவி கொடுத்துள்ளது. அதில் 230 கோடி மானியமாக கொடுத்து அவர்கள் தொழில் முனைவோராக தேவையான உதவிகளை இந்த அரசு செய்துள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் சுமார் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பண்ணடுக்கு தொழில் கூடங்கள் அமைய உள்ளன. தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை, கோவை குறிச்சி தொகுப்பு பேட்டை ஆகிய பகுதிகளில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தின் முக்கிய தொழிலாக உள்ள தென்னை நார் சார்ந்த தொழிலுக்காக ஐந்து இடங்களில் கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 4 கோடி மதிப்பீட்டில் கயிறு உற்பத்திகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 2,186 கோடி மதிப்பீட்டில் தென்னை ஏற்றுமதி இங்கிருந்து செய்யப்படுகிறது.
எம்எஸ்எம்இ துறையினருக்கு ஏற்படும் மின்சார செலவுகளைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு எம்எஸ்எம்இ துறை சார்பாக மின்சாரத் துறைக்கு கடந்த ஆண்டு 330 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 386 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் 126 கோடி மதிப்பீட்டில் குறிச்சி பகுதியில் அமைய உள்ள தங்க நகை தொழில் பேட்டை முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தேவையான வசதியுடன் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications