கோயம்புத்தூரில் நீலாம்பூர் வரை.. ஜிடி நாயுடு மேம்பாலம் நீட்டிப்பு.. எப்போது சாத்தியமாகும்?
கோவை: தமிழ்நாட்டில் மிக அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ள சாலை என்றால் அது தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜிஎஸ்டி சாலையாகும். அங்கு கூட இல்லாத மேம்பால வசதி தான் கோவை மாநகரில் தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மேம்பாலம் கோவை மாநகரின் நுழைவு வாயிலான நீலாம்பூர் வரை கிடையாது. கோல்டுவின்ஸ் வரை தான் உள்ளது. எனவே அவினாசி ரோட்டில் நீலாம்பூர் வரை மேம்பாலம் நீட்டிக்கப்பட உள்ளது. ஆனால் எப்போது என்பது தான் கேள்வியாக உள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, ஒரு காலத்தில் அதாவது 2000 காலகட்டத்தில் எல்லாம் மதுரை அளவிற்கு தான் இருக்கும். ஆனால் கோவையில் 2000க்கு பிறகு ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் அது படிப்படியாக வளர்ந்தது. கோவையில் பல்வேறு மாவட்ட மக்கள் பிழைப்பு தேடி நகர்ந்தனர்.. ஒரு கட்டத்தில் நிரந்தரமாக குடியேறினார்கள். இதன் காரணமாக கோவையில் மக்கள் தொகை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாக மிகப்பெரிய வணிக மையமாகவும் உருவெடுத்தது. கோவையில் கடந்த 10 ஆண்டுகளில் ஐடி துறையிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் தொகை என்பது கோவையில் சுமார் 30 லட்சம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. கோவை மாநகரம் இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்தும் எல்லா சாலைகளிலும் கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக அவினாசி சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கோவையில் உக்கடத்தில் இருந்து கருமத்தப்பட்டிக்கு செல்லவே மணி கணக்கில் ஆனது. ஏனெனில் சிக்னல்கள் அதிகம். வாகன நெருக்கமும் அதிகம்.
இதனால் கோவை- அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரில் மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேம்பாலம் உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை இருக்கிறது. தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் ஆகும். இதில் தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது.
எனினும் இந்த மேம்பாலம் கோல்டு வின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் மக்களுக்கு இந்த பாலத்தால் முழு பயன் கிடைக்கும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதற்கான பணிகள் ரூ.600 கோடியில் நடைபெறும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கான திட்ட வரைவுகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தயாரித்து வருகிறது. இந்தநிலையில் அவினாசி ரோட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் போது, நீட்டிக்கப்படும் மேம்பாலத்துடன் 1.5 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைந்து மேம்பாலத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற சான்ஸ் இருக்கா?
ஆனால் நடைமுறையில் என்ன சிக்கல் என்றால், கோவை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை. அது கிடப்பில் கிடக்கிறது. இதனால் நெடுஞ் சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுத்து குறித்து இன்னும் அதிகாரிகள் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். இது ஒருபுறம் எனில், கோல்டுவின்ஸ், விமானங்கள் இறங்கும் பகுதி என்பதால் மேம்பாலத்தை நீட்டிக்க மத்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்து இருந்தாலும் விமானநிலைய ஆணையமும் அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
தற்போதைய நிலையில் நீலாம்பூர்வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலத்தை நீட்டிக்க ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை திட்ட செலவாக வாய்ப்பு உள்ளதா அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மேம்பாலம் மற்றும் அதில் அமைக்கப்படும் மின்கம்பத்தின் மொத்த உயரம் 20 மீட்டர் வரை வருகிறது.. எனவே இதற்கு விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் விமானநிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய இருக்கிறது. அதன்பிறகு ஒப்புதல் கிடைக்கும். மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இந்த மேம்பாலத்தை அமைப்பதா அல்லது தனியாக அமைப்பதா என்று இன்னும் அரசு இறுதி முடிவு எடுக்க வில்லை.எனினும் மெட்ரோ பாதையுடன் இணைந்து செயல்படுத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications