15 ஆயிரம் ரூபாய் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாம்.. கோவையில் ஆப் மூலம் புது மோசடி
கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் நூற்றுக்கணக்கானோரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தை இயக்கி வந்த மைதின் மற்றும் ஃபரிதா ஆகியோர் மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதி கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. ஒவ்வொரு வருடமும் யாராவது ஒருவர் ஏமாற்றிவிட்டு ஓடுவது நடக்கிறது. ஏலச்சீட்டு தொடங்கி நிதி நிறுவனம் வரை பல்வேறு முறைகளில் மக்களின் முதலீட்டை பெற்று ஏமாற்றும் நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் புதிதாக ஒரு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவையை மையமாகக் கொண்டு ஜிஎம்ஆர் குரூப் என்ற நிறுவனம் செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. மைதின் மற்றும் ஃபரிதா என்பவர்கள் இயக்கிய இந்த நிறுவனம் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் முதலீடு செய்வதுடன், கொடுக்கப்படும் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறினார்களாம்.
இந்த நிலையில், அந்த நிறுவனம் பலரிடம் பெற்ற பணத்தை மோசடி செய்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மொத்தமாக புகார் அளித்துள்ளனர். தங்களிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத் தரும்படி கோரியுள்ள பொதுமக்கள், நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆப் எப்படி செயல்பட்டுள்ளது என்றால், ரங்கண கட்டை உருட்டுவார்களே அதுபோல் தான். முதலில் குறைவாக கட்டிய பணத்திற்கு நல்ல லாபம் தந்து திருப்பி தந்துள்ளார்கள். அதன்பின்னர் அதிகமாக பணம் போட்டால் இதைவிட அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய மக்கள், கூடுதல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.
முதலீடு செய்து பாதிக்கப்பட்ட கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த ஜுபேரியா என்பவர் கூறுகையில், "15 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் தினமும் 540 ரூபாய் பணம் சம்பாதிக்கலாம் என்றார்கள். தொடக்கத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை பணம் வந்தது. பின்னர், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் கூடுதலாக பணம் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தினார்கள்.
இதனால் முதலீடு செய்தோம். கடன் பெற்றும், தாலி உட்பட தங்க நகைகளை அடகு வைத்தும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்திருக்கிறோம். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட நாங்கள் அதில் இருந்து பணம் சம்பாதிக்கவே இல்லை. இது குறித்து அந்த நிறுவனத்திடம் நாங்கள் கேட்ட போது, ஆப்பை அப்டேட் செய்ததாக கூறி காலத்தை கடத்தி வந்தனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான சிலர் உயிரையும்விட முடிவு செய்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவது தெரியவந்தது.
தற்போது அவர்களது வங்கிக் கணக்கு முடங்கிவிட்டது, முழுமையாக நிறுவனத்தை நிறுத்தி விட்டார்கள். எங்களை ஏமாற்றிவிட்டனர். அவர்களிடம் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆசை வார்த்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்" இவ்வாறு ஜுபேரியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications