கோவை கல்லூரி மாணவிக்கு.. பாலியல் டார்ச்சர் கொடுத்த விடுதி உரிமையாளர்.. பாடம் கற்பித்த உறவினர்கள்
கோவை: கோவை மாவட்டம் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான தனியார் கல்லூரிகள் உள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கோவையில் தங்கி படிக்கின்றனர்.
அப்படி தனியார் விடுதியில் தங்கிய மாணவிக்கு அந்த விடுதி உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பீளமேடு காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, பேருந்து உள்ளிட்ட பொது இடங்கள் எதுவுமே பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்தி கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையிலும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் பாலமுருகன் தன் செல்போனில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அந்தப் பெண்கள் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெண்களை வீடியோ எடுத்தது உறுதியானது என்பதால், பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கோவை அடுத்த சம்பவம் நடந்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் நிறைய கல்லூரிகள் உள்ளன. பீளமேடு என்ற பகுதியில் ராஜ்குமார் என்பவர் மகளிர் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார்.
இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கியுள்ளனர். ராஜ்குமார் அந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ராஜ்குமார் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை நேற்று தன் காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவர் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்பார்க்காத மாணவி அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தன் பெற்றோர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கோபமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ராஜ்குமார் முறையாக பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் மாணவியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கினர். பிறகு அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவி தரப்பில் ராஜ்குமார் மீது புகாரும் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பீளமேடு காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications