”கோவை முதல்வர் ஸ்டாலினின் இதயத்தில் உள்ளது ” - அமைச்சர் செந்தில்பாலாஜி நெகிழ்ச்சி
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் முதல்வரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது எனவும், அனைத்து திட்டங்களும் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்டமாக கோவை மாறும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான பூமி பூஜையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதல்வர் கோவை மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கூறினார்.
இந்த பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறிய அமைச்சர், விரைவாக இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி உள்ளதாகவும், கோவை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த காலங்களில் எந்த விதமான சாலைகளும் புதுப்பிப்பது அல்லது புனரமைப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார்.

கோவை மேம்பால வழக்குகள்
கோவை மாவட்டத்தில் மேம்பாலப் பணிகளை பொறுத்தவரை நிறைய வழக்குகள் உள்ளன எனக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, குறிப்பாக அந்த வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்துப் பேசி, அதில் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களையும் அழைத்து பேசி ஒரு சுமூக உறவு ஏற்படுத்தப்பட்டு மேம்பால பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், கடந்த ஆட்சியில் பொது மக்களிடம் முறையாக கருத்து கேட்காமல் அவருடைய உணர்வுகளுக்கு எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும், எனவே அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார்.

கோவையில் செம்மொழி பூங்கா
கோவையில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன எனக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்கட்டமாக அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது எனவும், ஆட்சிப் பொறுப்பை ஏற்று எட்டு மாதமே ஆகும் நிலையில் முதல்வர் தொடர்ந்து கோவை மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார் எனவும், குறிப்பாக கோவையில் வரலாற்றில் ஒரே மேடையில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளதை குறிப்பிட்டார்.

முதல்வரின் இதயத்தில் கோவை
கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் முதல்வரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது எனவும், அனைத்து திட்டங்களும் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்டமாக கோவை மாறும் எனக்கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கிராமசபை நிகழ்ச்சிக்கு முதல்வரின் அறிவுரைப்படி சென்ற போது, மக்கள் குறிப்பாக சாலைகள் மிக மோசமாக உள்ளது என கூறியதாக தெரிவித்தார்.

பாதாள சாக்கடை திட்டம்
பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை எனவே உடனடியாக அந்த பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது எனவும், அதனை தொடர்ந்து அந்த பணிகள் நிறைவேற்றுவதற்காக முதல்கட்டமாக 6 கோடி ரூபாய்க்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், அடுத்தடுத்த நிலைகளில் அடுத்தடுத்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறும் எனவும் கூறினார்..












Click it and Unblock the Notifications