திடீர்னு கம்பெனியை மூடிவிட்டால்! இஎம்ஐ, லோன் கட்ட எங்க போறது! கதறும் கோவை ஐடி ஊழியர்கள்
கோவை: கோவையில் ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இனி நாங்கள் வாங்கிய லோனை எப்படி திருப்பிச் செலுத்துவோம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை ஆர்எஸ் புரம், சுங்கம் பகுதியில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம், இங்கு நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த நிறுவனத்தை மூடுவதாகவும் இனி யாரும் பணிக்கு வர வேண்டாம் என்றும் நிர்வாகம் தரப்பு ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு செட்டில்மென்ட், கிராஜுவிட்டி உள்ளிட்டவைகளை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். இதையடுத்து அந்த ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊழியர் விஜயலட்சுமி என்பவர் கூறியதாவது: நான் இந்த கம்பெனியில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான் வேலை செய்யும் போர்ட்டலும் நிறுத்தப்பட்டதாக வருகிறது. நிர்வாகம் எங்களுக்கு முன்ன கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் வேறு வேலையை தேடி இருப்போம்.
ஜனவரி மாதம் ஊதியம் கூட எங்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. பிஎஃப் செட்டில்மென்ட்டில் என்ட் டேட்டை கம்பெனி போட்டுக் கொடுத்தால்தான் எங்களுக்கு அந்த பணம் கிடைக்கும். எங்களுடைய நிறுவனத்தின் முக்கிய நோக்கமே E learning.

அதாவது அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்டவைகளை அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. திடீர்னு கம்பெனியை மூடியதால் எங்களுக்கு கஷ்டம்! இந்த நிறுவனத்தின் வேலையை நம்பி இஎம்ஐ, லோன் உள்ளிட்ட கமிட்மென்ட்கள் எல்லாம் இருக்கின்றன.
மேலும் நாங்கள் abscond என கம்பெனி அறிவித்துவிட்டதால் வேறு கம்பெனிக்கு சென்றாலும் எங்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் . எக்ஸ்பீரியன்ஸ் கடிதமும் கொடுக்கப்படவில்லை. எங்கள் ரெஸ்யூமை பார்வேர்டு செய்யுமாறு ஜேசன் என்பவர் மெயில் அனுப்பினார். எங்கள் ரெஸ்யூமை வைத்து வேறு கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறோம் என்கிறார். எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எங்களுக்கு வேலை வங்கித் தர யார், எங்களது சம்பளத்தை கொடுத்தால் நாங்கள் போய்விடுவோம். இவ்வாறு ஊழியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications