ஆனைகட்டி, அட்டப்பாடி ஆறுகளில் குளிக்க தடை.. இறங்கினால் அபராதம்.. கோவை மக்கள் அதிர்ச்சி
கோவை: தமிழ்நாட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. ஆறுகளிலும், காடுகளிலும் கூட கடுமையான வறட்சி நிலவுகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதரமான சிறுவாணி மற்றும் நீலகிரியில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக கோவை வரும் பவானி ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை அருகே உள்ள ஆனைகட்டி, அட்டப்பாடி, அகழி பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை - கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டி, அட்டப்பாடி பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிப்பதற்காக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுப்பயணிகள் செல்வார்கள். இதமான தட்பவெப்பம், குளிர்ந்த நீரோட்டம் ஆகியவற்றை ரசிப்பதற்காக அங்கு அதிகளவு மக்கள் செல்வார்கள். ஆனால் வெயில் மற்றும் மழை இல்லாததால் சிறுவாணி மற்றும் பவானி ஆறுகளில் தண்ணீர் குறைந்துள்ளது.

ஆறுகளில் நீர்மட்டம் குறைவு
சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் கேரளா - தமிழக எல்லையான ஆனைகட்டி பகுதியில் இருந்து கோவைக்குள் வருகிறது. தற்போது இந்த ஆறுகளில் தண்ணீர் குறைந்துள்ளதால் அட்டப்பாடி, ஆனைகட்டி பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிப்பதற்கு கேரளா அரசு தடை விதித்துள்ளது. தமிழக - கேரள எல்லையோரமான அட்டப்பாடி பகுதியில் நிலவும் கடும் வறட்சி மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.
இதனால் பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் எந்த நோக்கத்திற்காகவும் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். அட்டப்பாடி அகழி கிராம பஞ்சாயத்து பகுதியில் பவானி மற்றும் சிறுவாணி என இரண்டு முக்கிய ஆறுகள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால், இந்த ஆறுகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
குளிப்பதற்கு தடை
அந்தப் பகுதியில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் குடிநீருக்காக இந்த ஆறுகளையே முழுமையாக நம்பியுள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தமிழகத்தில் கோவை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த ஆறுகளுக்கு வந்து செல்கின்றனர். குறைந்த அளவு நீர் ஓடும் நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளிப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அடுத்த 40 நாட்களுக்கு அல்லது மழை பெய்யும் வரை சுற்றுலா பயணிகள் ஆறுகளில் இறங்குவதற்கு அகழி கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது குறித்துத் தெரிவித்த அகழி பஞ்சாயத்து தலைவர் ஷிபு கூறுகையில், சுற்றுலா பயணிகள் இந்தப் பகுதிக்கு வந்து செல்லலாம். அதற்கு எந்த தடையும் விதிக்கப்பட்டவில்லை.
அபராதம்
குடிநீர் மாசுபாட்டை தவிர்ப்பதற்காகவே அட்டப்பாடி, ஆனைகட்டி ஆறுகளில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்குச் சிறிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டுக்கிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே விடுமுறையைக் கழிப்பதற்காக ஆனைகட்டி, அட்டபாடி, அகழி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்வத்துடன் வந்த தமிழக சுற்றுலா பயணிகள், ஆற்றில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications