இ சேவை மையம் நடத்தி வந்தவர்.. சொந்த வீடு கூட இல்லாதவர்.. கோவை மேயர் வேட்பாளர் தேர்வின் பின்னணி!
கோவை: எளிமையான வாடகை வீட்டில் வசித்து வருகிறார் கோவை மேயர் வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார்.
தற்போது அரசியல்வாதி என்றாலே பெரும்பாலும் ஆடம்பரம், பினாமி பெயரில் சொத்துகள், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு என்பதைதான் பார்த்திருப்போம். இதில் சிலர் விதிவிலக்காக உள்ளார்கள்.
தமிழகத்தின் பெரிய தொழில் நகரம் என்றால் அது கோவைதான். அத்தகைய வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் நம்ப முடிகிறதா?

கல்பனா ஆனந்தகுமார்
ஆம் அவர் பெயர் கல்பனா ஆனந்தகுமார். திமுக சார்பில் போட்டியிட்டு கோவை மாநகராட்சியில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்றார். இவர் 1971 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்ற கல்பனா காரில் செல்ல வசதியில்லாமல் கோவையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தார்.

சொந்த வீடு இல்லாதவர்
சொந்த வீடு கூட இவருக்கு இல்லையாம். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவை கணபதி பகுதியில் மணியகாரம்பாளையத்தில் இசேவை மையம் நடத்தி வருகிறார். இவரை மேயராக தேர்வு செய்யலாம் என பரிந்துரைத்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என தெரிவிக்கிறார்கள்.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கல்பனா யாரும் எதிர்பார்க்காத ஒரு தேர்வாகும். கோவை மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அவர்களின் புதல்வி நிவேதா அல்லது முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் முன்னாள் துணை மேயராகவும் இருந்த கார்த்திக்கின் மனைவி இலக்குமி, அல்லது முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு ஆகியோரில் ஒருவர் மேயர் வேட்பாளராக இருக்கலாம் என திமுகவினர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பரிந்துரை
ஆனால் கோவை மாநகராட்சி 19ஆவது வார்டில் வெற்றி பெற்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் பெரிதாக இல்லாத சாதாரண நடுத்தர குடும்ப பெண்மணியான கல்பனாவை மேயராக அறிவித்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது திமுக. கோவையில் 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சியினரை வெற்றி பெற வைத்து திமுகவை கோவையில் வலுவாக காலூன்ற வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது திமுகவுக்கு இருந்த நம்பிக்கையே கல்பனாவின் பெயரை முதல்வர் டிக் அடிக்க காரணம் என சொல்லப்படுகிறது. எந்தவித கோஷ்டி பூசலிலும் சிக்காத பாரம்பரியமிக்க கல்பனாவை கோவை மேயர் வேட்பாளராக்கியுள்ளது திமுக. பிரபலமான அரசியல்வாதிகள் இருந்தும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரை பரிந்துரைத்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications