Coimbatore Mayor: கோவை மேயர் தேர்தல்.. திமுகவின் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு.. யார் இவர்?
கோவை: கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் இன்று கோவை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக களமிறங்கிய ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022ம் ஆண்டில் தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றனர். அதேபோல் திமுக கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேர், மதிமுகவை சேர்ந்த 3 பேர் வென்றனர்.

இதனால் கோவை மாநகராட்சி மொத்தமாக திமுக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதாவது 100 வார்டுகளில் திமுகவுக்கு 76 கவுன்சிலர்களும், கூட்டணி கட்சிகளுக்கு 20 கவுன்சிலர்களும் கிடைத்தனர். மாறாக அதிமுக படுதோல்வியடைந்தது. அதிமுக சார்பில் 3 பேர் வென்ற நிலையில் கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் ஒருவர் மட்டுமே வென்று கவுன்சிலரானார்.
இதையடுத்து திமுகவின் மேயராக கல்பனா தேர்வு செய்யப்பட்டார். இவர் திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் 9 வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சப்போர்ட் இருந்தது. அவரது பரிந்துரையின்பேரில் தான் கல்பனா கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் கல்பனாவுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இதுதொடர்பான புகாரை தொடர்ந்து கட்சி மேலிடத்தின் அறிவுரைப்படி கல்பான தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கோவை அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்றது. அமைச்சர்கள் கேஎன் நேரு, முத்துசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். இவர் 29வது வார்டு கவுன்சிலராக தற்போது உள்ளார்.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் நடந்தது. அப்போது மேயர் வேட்பாளராக ரங்கநாயகி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் போட்டியின்றி ஒருமனதாக கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் கோவை மாநகராட்சியின் 7 வது மேயர் என்ற பெருமையும், கோவை மாநகராட்சியின் 2வது பெண் மேயர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
மேலும் ரங்கநாயகி ஒரு மனதாக வெற்றி பெற என்ன காரணம் என்று பார்த்தால் மாநகராட்சியின் திமுகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக கவுன்சிலர்கள் உள்ளன. 100 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 96 கவுன்சிலர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிக்கு வெறும் 4 கவுன்சிலர்கள் தான் உள்ளனர். இதனால் எதிர்க்கட்சி சார்பில் மேயர் பொறுப்புக்கு வேட்பு மனு செய்யவில்லை.
அதேபோல் திமுக மேலிடம் ரங்கநாயகியை மேயர் வேட்பாளராக தேர்வு செய்ததால் அந்த கட்சி மற்றும் கூட்டணி கவுன்சிலர்களும் மேயர் தேர்தலில் வேட்பு மனு செய்யவில்லை. இதனால் போட்டியின்றி ரங்கநாயகி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications