கோவையில் நாயுடு சமூகத்தினர் பாஜக அண்ணாமலைக்கு ஆதரவா? மறுத்து பரபரப்பு பேட்டி அளித்த சங்க நிர்வாகி
கோவை: கோவையில் கம்மவார் நாயுடு சங்கத்தினர் தங்கள் ஆதரவை கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வழங்குவதாகவும் பாஜகவுக்கு எங்கள் ஆதரவு என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்ற வாரம் எங்களின் கோவை கம்மவார் சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய ஒரு சில சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள்.

இது முற்றிலும் எங்க சங்க விதிகளுக்கு முரணானது, எதிரானது. இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எங்கள் சங்க விதிகள் என்ன சொல்கிறது என்றால், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிற்கும் பட்சத்தில் அவர்களுக்குத்தான் முதல் உரிமை, ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுதான்.
எங்கள் சமுதாயத்தில் இருந்து யாருமே போட்டியிடவில்லை என்றால் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் யாராவது போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் சங்கத்தின் நிலைப்பாடு. அதனடிப்படையில் எங்கள் நாயுடு சங்கம், கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம்.
பாஜகவுக்கு ஆதரவு என எங்கள் சங்கத்தின் நிர்வாகி கோபால் சொல்லியிருக்கிறார் என்றால் அவருக்கு சங்க விதிகளே தெரியவில்லை என்று அர்த்தம். அது போல் எங்களுடன் கலந்து ஆலோசிக்கவும் இல்லை. அவரே தான்தோன்றித்தனமாக பாஜகவுக்கு எங்கள் சங்கம் ஆதரவு என்பது போல் கூறிவிட்டார். இதனால் எங்கள் சங்கத்திலிருந்து அந்த நபரை நீக்கிவிட்டோம். எனவே நாயுடு சமூகத்தினர் யாரும் குழப்பமே அடைய வேண்டாம். அனைத்து நாயுடு சங்கங்களும் முழு ஆதரவாக கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்குத்தான் ஆதரவு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை பல சங்கங்கள் திரும்ப பெறுவதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு விவசாயிகள் சங்கம், அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. தற்போது கம்மவார் நாயுடு சங்கமும் தங்கள் ஆதரவு அதிமுகவுக்குத்தான் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications