கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்க வந்து மொத்தமாக வாரி சுருட்டிய வடமாநிலப் பெண்கள்.. கோவையில் அதிர்ச்சி
கோவை: நம்ம கோவைக்கு என்னதான் ஆச்சு என்பதை போல கோவையில் பல நூதன சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் வட மாநில பெண்கள் தனியார் நிறுவனத்தில் பிச்சை எடுப்பது போல சென்று, காப்பர் ஒயர், பினாயில் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைதியோ அமைதியாக இருந்த கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக கிரைம் ரேட் எகிறி கொண்டிருக்கிறது. பொதுவாக கோவையில் சதுரங்க வேட்டை பாணியில் நூதனமான முறையில் நிதி மோசடிகள் நடைபெறும். எம்எல்எம், ஈமு கோழி, மண்ணுளி பாம்பு முதல் கடந்த வருடம் வீடியோ பார்த்தால் பணம் என்று கிளம்பிய MYV3Ads வரை ஏராளமான மோசடிகள் அரங்கேறியுள்ளன.

கடந்த சில வருடங்களாக கொலை, கொள்ளை, போதைப் பொருள் பயன்பாடு என்று பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை அத்திபாளையம் பகுதியில் பிச்சை கேட்பது போல் வந்த வட மாநில பெண்கள் கைவரிசை காட்டி திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
கோவை அத்திபாளையம் பிரிவு பகுதியில் ஒரு தனியார் பம்ப் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் வட மாநிலத்தைச் சேர்ந்த 7 பெண்கள் பிச்சை எடுப்பது போல சென்றுள்ளனர். சில பெண்கள் கைக் குழந்தைகளுடன் இருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் நிறுவனத்தின் முன் பகுதியில் யாரும் இல்லை.
இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வட மாநில பெண்கள், அந்த வளாகத்தில் கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் திருடியுள்ளனர். காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்கள் ஆகியவற்றுடன் கழிப்பறையில் இருந்த பினாயில் பாட்டிலையும் திருடி சென்றார்கள். சிறிது நேரத்தில் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்து அந்த பெண்களை விரட்டினார்கள்.
திருடிய பொருட்களை உடனடியாக அவர்களின் பையில் பதுக்கியதால், அந்த பெண்கள் என்ன திருடினார்கள் என்று தெரியவில்லை. ஒரு பெண் அங்கிருந்த ரெயின் கோட்டை எடுத்து செல்ல, அதற்குள் நிறுவனத்தின் ஊழியர் வந்துவிட்டதால் அதை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை வட மாநில பெண்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வட மாநில பெண்கள் கைக்குழந்தை உடன் வந்து, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த பினாயில் பாட்டிலை கூட திருடி சென்ற சிசிடிவி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மறுபக்கம் இது அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த பெண்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் யாரெனும் சுற்றி திரிந்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சரவணம்பட்டி காவல்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications