கோவையில் ஈவு, இரக்கமில்லாமல் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய கோவை காப்பக உரிமையாளர் கைது!
கோவை: கோவையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளர் செல்வராஜ், சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காப்பகத்தில், குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் பதிவு செய்து, குழந்தைகளுக்கு உணவு, உடைகள் அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்டம் முழுவதும், தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று நன்கொடைகள் என்ற பெயரில் வசூலிலும் ஈடுபடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் உள்ளது.
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற சுமார் 26 குழந்தைகளை பராமரிப்பதாக கூறப்படுகிறது. அங்கு குழந்தை ஒன்றை அங்கு உள்ள நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையாக தாக்கிவிட்டு மிரட்டலையும் விடுக்கிறார். அந்த சிறுவனுக்கு பக்கத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவன் பயந்தபடியே அவர் அடிப்பதை பார்க்கிறான்.
இந்த தாக்குதல் விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாய், தந்தையரை இழந்து ஆதரவற்று தவிக்கும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக அமையும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. மேலும் மற்ற குழந்தைகளையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த காப்பகத்தின் வங்கிக் கணக்கை சரி பார்த்து உண்மையில் அந்த காப்பகத்திற்கு வரும் பணம், முறையாக அந்த குழந்தைகளுக்கு செலவிடப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் சிறுவனை பெல்ட்டால் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் காப்பக உரிமையாளர் செல்வராஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அங்குள்ள 9 ஊழியர்களிடம் விசாரணையும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications