2 நாள் தான்..கோவையில் எங்க போனாலும் போலீஸ் பிடிப்பாங்க.. பைக்ல போறவங்க உடனே வாங்குங்க!
கோவை: கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.
வருகிற 26-ந் தேதி முதல் போலீசார் வாகன சோதனை நடத்தும் போது சிக்கினால் ஹெல்மெட் அணியாமல் பின்னர் அமர்ந்து செல்பவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல்களை குறைக்க யூடர்ன், ரவுண்டானா ஆகிய திட்டத்தை போலீசார் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

சாலைக்கு ஏற்ப 'யு டர்ன்' அல்லது 'ரவுண்டானா' திட்டத்தை மாநகர போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள். இதில் யு டர்ன்'திட்டம் என்றால் சிக்னல்கள் மூடப்பட்டுவிடும்.அதற்கு 100 மீட்டர் முன்பும், பின்பும் வாகனங்கள் திரும்ப தடுப்புக் கற்களை அகற்றி இடைவெளி ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த இடைவெளி வழியாக வாகனங்கள் 'யு டர்ன்' செய்து வேண்டிய இடங்களுக்கு செல்லும் வழியை உருவாக்கி வருகிறார்கள்.
அதேநேரம் சில இடங்களில் சாலை வசதி அகலமாக இருந்தால் 'ரவுண்டானா' திட்டமும் செயல்படுத்தி வருகிறார்கள். சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு தடுப்புக் கற்களை அமைத்து ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்கிறார்கள். இதனால் வாகனங்களை நிறுத்தாமல் தாராளமாக போகலாம்.
சரி கோவையில் எங்கெல்லாம் தற்போது யூடர்ன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது: கோவை மாநகரில் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, எஸ்.ஓ பங்க் சந்திப்பு, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த 'யு டர்ன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரவுண்டானா திட்டம் எங்கெல்லாம் அறிமுகம்: கோவை நகரில் சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலையில் வின்சென்ட் சாலை பிரிவு, கிக்கானி பள்ளி சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, லாலி சாலை சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ரவுண்டானா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்படி திட்டங்களை செயல்படுத்தி வரும் கோவை போலீசார், அடுத்ததாக கோவை மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். அதன்படி கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.
வருகிற 26-ந் தேதி முதல் போலீசார் வாகன சோதனை நடத்தும் போது சிக்கினால் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு கோவை போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications