கோவையில் வழிப்பறி முயற்சி! ஹவாலா பணத்திற்கு குறி! கார் மாறி போச்சு! சிக்கிய 4 பேர் வாக்குமூலம்!
கோவை: கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஹவாலா பணம் இருக்கும் என நினைத்து வேறு ஒரு காரை மாற்றி வழிமறித்துவிட்டதாக கைதான 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அஸ்லாம் சித்திக் தன் நண்பர்களுடன் பெங்களூர் சென்றார்.

அங்கு கணினி மற்றும் உதிரி பாகங்களை வாங்கிக் கொண்டு அவர் கோவை வழியாக கேரளா திரும்பினார். அப்போது கோவை மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 2.30 மணிக்கு இரு கார்களில் முகமூடி அணிந்து வந்த 6 மர்மநபர்கள் சித்திக் வந்த காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனால் சித்திக்கின் கார் வேகமாக சென்றது. அப்போது ஒரு இடத்தில் காரை ஓவர்டேக் செய்து குறுக்கே நின்ற வைத்து வழி மறித்தனர். உடனே காரின் கதவை திறந்து கட்டை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் கார் கண்ணாடியை தாக்கியுள்ளனர். உடனே உஷாரான சித்திக் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்துவிட்டு காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாக முன்னோக்கி சென்று அருகில் இருந்த சுங்க சாவடிக்கு சென்றுவிட்டார்.
பின்னாடியே அந்த கும்பல் துரத்தி வந்த நிலையில் அங்கு மதுக்கரை போலீஸார் ரோந்து பணியில் இருந்ததை கண்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சித்திக போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸ், இது தொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.
மேலும் இருவரை தேடி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில் ஹவாலா பணம் என நினைத்து மற்றொரு காருக்கு பதிலாக சித்திக் வந்த காரை மறித்து வழிப்பறியில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது. இந்த 4 பேரில் விஷ்ணு என்பவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் பாலக்காடு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications