கோவையில் 25 அடி பள்ளத்தில் விழுந்த ‘ரோலக்ஸ்’ யானை.. போஸ்ட் மார்ட்டமில் வெளியான அதிர்ச்சி விஷயங்கள்
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வரகழியாறு மரக்கூண்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இறந்துவிட்டது. இதுகுறித்த விசாரணை நடக்கிறது. யானைக்கு போஸ்ட் மார்ட்டமும் செய்யப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானை ஒன்று அட்காசம் செய்தபடி சுற்றி வந்தது.. அத்துடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்து வந்தது..

இதனால் அங்கிருந்த விவசாயிகளும், பொதுமக்களும், இந்த யானையை ரோலக்ஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்... எப்படியாவது, இந்த காட்டு யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்..
25 அடி பள்ளத்தில் விழுந்த யானை
இதையடுத்து, வனத்துறையினர் அந்த பகுதியிலேயே முகாமிட்டு, ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் 17ம் தேதி பிடித்துவிட்டனர்.. பிறகு ஆனைமலை வரகழியாறு யானைகள் முகாமிற்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி, லாரியில் ஏற்றி ஆனைமலை வரகலியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரேடியோ காலர் கருவியை பொருத்தி, மந்திரிமட்டத்தில் உள்ள வனப்பகுதியில் விட்டுவிட்டு வந்தனர்.. அத்துடன், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தும் வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அங்குள்ள ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்றபோது, அந்த யானை திடீரென வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டது.. இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது..
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் யானை இறந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்கள்..
ரேடியோ காலர்
அப்போது, "ரோலக்ஸ் ஆண் யானையை பிடித்து, ரேடியோ காலரையும் பொருத்தி, நவம்பர் 12ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் மந்திரிமட்டத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது.. அந்த இடம் நல்ல உணவு மற்றும் நீர் ஆதாரங்களைக் கொண்ட இடமாகும்...
விடுவிக்கப்பட்ட நாளிலிருந்தே யானை அந்த பகுதிகளில் நன்றாக மேய்ந்தும், தண்ணீர் குடித்தும் வந்தது.. யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தபடியே இருந்தனர்.
ஆனால், நேற்றுமுன்தினம் மதியம் 2 மணிக்கு, யானை தண்ணீர் குடிக்க அருகிலுள்ள ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க சென்றது.. அப்போது யானை தரையில் வழுக்கி கீழே விழுந்துவிட்டது.. உடனே கண்காணிப்பு குழுவினர் ஓடிச்சென்ற பார்த்தபோது யானை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.. யானை எப்படி இறந்தது என்பது குறித்து, உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
போஸ்ட் மார்ட்டம்
இந்நிலையில் ரேடியோ காலர், GPS தரவு, சிகிச்சை மற்றும் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிறகு, வனத்துறை கால்நடை டாக்டர் வெண்ணிலா, கோவை உதவி கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில், 25 அடி பள்ளத்தில் கால் சறுக்கி கீழே விழுந்தது. இதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. மேலும் இதயத்தில் வீக்கமும், ரத்த கசிவும் இருப்பது, போஸ்ட் மார்ட்டத்தில் கண்டறியப்பட்டது. யானைக்கு ஏற்கனவே சில நோய் பாதிப்பு உள்ள நிலையில், கீழே விழுந்ததில் காலில் படுகாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications