கோவை சாய்பாபா காலனிக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.. மேம்பாலம் குறித்து முக்கிய அப்டேட்
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது. இதை சரி செய்வதற்காக பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் சாய்பாபாகாலனி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சாய்பாபா காலனி மேம்பால பணிகள் எப்போது முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முக்கிய அப்டேட்டை கூறியுள்ளனர்.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமான அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

கோவை மேம்பாலங்கள்
கோவை மாநகரில் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பெருகி கொண்டிருக்கிறது. போக்குவரத்து பிரச்சனையை சரி செய்வதற்காக முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா அமைப்பது, யூடர்ன்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியமாக மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே உள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பிரதான சாலை, சந்தை மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக ஜி.என். மில்ஸ், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஏற்கனவே மேம்பாலம் திறக்கப்பட்டது.
சாய்பாபா காலனி மேம்பாலம்
இதன் மூலம் புறநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் சாய்பாபாகாலனி தொடங்கி ஜிஎன் மில்ஸ் வரை கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து சாய்பாபா காலனி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சரி செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
அதன்படி அழகேசன் சந்திப்பு பகுதியில் தொடங்கி எருகம்பெனி வரை சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு, ரூ.71 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த வருடம் தொடங்கியது. இதற்கான பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 16.6 மீட்டர் அகலம், 975 மீட்டர் நீளம் அளவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 30 மீட்டர் இடைவெளியில் 23 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
எப்போது திறப்பு
மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மேம்பால பணிகளை காரணம் காட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் தினம் தினம் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பணிகள் எப்போது முடியும் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, "கோவை மாநகரின் மையப் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பகுதியாக பிரித்து பிரித்துதான் பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருடத்திலேயே மேம்பாலம் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது." என்றனர்.












Click it and Unblock the Notifications