எங்க போகுது கோவை.. போதை இளைஞர்கள் தாக்குதல்.. கல்லை தூக்கி போட்டு கொல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு
கோவை: கோவையில் சமீபகாலமாக போதைப் பொருள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்து போதைப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் போதை இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரை கொடூரமாகத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், தொழில் துறை, ஐடி என அனைத்து வசதிகளிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உள்ளது. இதனால், அண்டை மாநிலங்கள், மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து வசித்து வருகின்றனர். கோவையில் சமீபகாலமாக போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சமீபகாலமாக சட்ட விரோத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அதிகரிக்கும் போதை புழக்கம்
அண்மையில் கோவை விமான நிலையம் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் இரவில் இருந்த கல்லூரி மாணவியை போதை கும்பல் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்திருந்தது. தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்திருப்பதே பலவேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என அனைததுக் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் போதை இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரை கொடூரமாகத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு போதை கும்பல்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் கற்களால் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
சுயநினைவின்றி போன இளைஞர்
இந்த தாக்குதலில் வெற்றி என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கீழே விழுந்தார். அந்த இளைஞர் மயக்கமடைந்த நிலையிலும், ஆத்திரம் தீராத அந்தப் போதைக் கும்பல் அவர் மீது பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அந்த கும்பலை நோக்கி ஓடிவந்து அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் உயிருக்குப் போராடிய வெற்றியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பயங்கர மோதல்
இளைஞர்களுக்கிடையே நடந்த இந்த பயங்கர மோதலை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டுத் தலைமறைவான இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
கஞ்சா புழக்கம்
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications