கோவை சிங்காநல்லூரில் ‘சிங்கம்’ போல வரப்போகும் மேம்பாலம்.. அடியோடு மாறும் திருச்சி சாலை
கோவை: கல்வி, தொழில், மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கிறது. இதனால் கோவை போக்குவரத்து நெரிசல் தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. அதிலும் கோவையில் இருந்து திருச்சி மற்றும் பல தென் மாவட்டங்களை இணைக்கும் சிங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் அதில் நல்ல செய்தி வெளியாக போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி காரணமாக கோவைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

கோவை போக்குவரத்து நெரிசல்
அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கோவையின் காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் (ஜிடி நாயுடு 10.10 கிமீ தொலைவு) சமீபத்தில் அவிநாசி சாலையில் திறக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதக்காக மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்காநல்லூர் மேம்பாலம்
அதிமுக ஆட்சியில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, லாலிரோடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாய்பாபா காலனி பகுதியில் மட்டும் மேம்பாலம் கட்டுட் பணி நடந்து வருகிறது. போக்குவரத்து பிரச்சனை அதிகமுள்ள சிங்காநல்லூர், சரவணம்பட்டி மேம்பால திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.
சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு கடந்த சில வருடங்களாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ரூ.110 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி 2.4 கி.மீ தொலைவுக்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெண்டர் ஒதுக்கப்படவில்லை.
ரூ.170 கோடி மதிப்பு
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக திட்டத்திற்காக நிதி அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மூலப்பொருட்களின் உயர்வால், தற்போது சிங்காநல்லூர் மேம்பாலம் அமைக்க ரூ.170 கோடி செலவலாகும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். வருகின்றன பட்ஜெட் கூட்டத் தொடரில் சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
காரணம் திருச்சி சாலையில் சிங்காநல்லூர் தொடங்கி பாப்பம்பட்டி வரை தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தற்போது சுங்கம் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக உள்ளது. அதனால் சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
விரைவில் நல்ல செய்தி
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் காத்திருப்பில் உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற்றுதான் மேம்பாலம் அமைக்க முடியும். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த 2 மாதங்களில் அந்த நடைமுறைகள் நிறைவடைந்து மத்திய அரசு சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு நிதி அறிவிக்கும்." என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications