செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க! அதிமுக வேட்பாளர் தர்ணா.. கோவை தெற்கில் பரபரப்பு
கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்து வருவதாகவும், ஆனால் பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி களம் காண்கிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்
கோவை தெற்கு தொகுதியில் கடந்த சில நாட்களாகவே வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாகவும், நேற்று முன் தினம் இரவு கூட கோவை ராமநாதபுரம் அருகே சிலர் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாகவும் அவர்களை அதிமுகவினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுத்தும் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுகவினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பணப்பட்டுவாடா நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் இதனை தடுக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி இன்று காலையில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பறக்கும் படை எதற்கு இருக்கிறது?
ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதிமுக வேட்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தர்ணாவில் ஈடுபட வேண்டாம், ஆட்சியர் வந்ததும் உள்ளே சென்று பேசுங்கள் என்று கூறி கோரிக்கை வைத்தனர். அப்போது, தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்தபோது வராத ஆட்சியர், இப்போது நாங்கள் தர்ணா செய்து கொண்டிருக்கக் கூடிய இடத்திற்கு வரவேண்டும். இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது தான் கலைந்து செல்வோம் என கூறினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்ஜுனன் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் கூறுகையில், பறக்கும் படை எதற்காக இருக்கிறது. சாதாரணமாக ஒரு மளிகை கடைக்கு போறவங்க, வியாபாரத்துக்கு போறவங்களை சல்லடை போட்டு ஒரு ரூபாய் எக்ஸ்ட்ரா வைச்சுருந்தா பறிமுதல் பண்ணிட்றாங்க.. ஆனால் இங்க கட்டுக்கட்டாக பணம் கொண்டு போறாங்க.. ஆனால் அவர்களை எதுவும் செய்ய மாட்டுக்காங்க...
எப்படி தேர்தலை சந்திக்க முடியும்?
நாங்க பணத்தோடு கையும் களவுமாக பிடித்து கொடுத்தாலும் விட்டுவிடுகின்றீர்கள். இன்னைக்கு காலையில் கூட அழகப்பா செட்டியால் வீதியில் 30 கோடி ரூபாயை பிடித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பணம் ராணுவ பாதுகாப்போடு வீட்டுக்கு போய் சேர்ந்துவிட்டது. பிறகு எப்படி நாங்கள் தேர்தலை சந்திக்க முடியும். என்ன ஹிட்லர் அரசாங்கமா நடக்கிறது.












Click it and Unblock the Notifications