டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி.. கோவையில் ஒரேயடியாக உயர்ந்த விலை.. சென்னையை விடவும் ரேட் அதிகம்!
கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் டீ, காபி விலையை உயர்த்தி டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதற்கிடையே சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் இருக்கும் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நம்ம ஊரில் பலருக்கும் டீ குடித்தால் தான் நாளே ஓடும். நமது வீட்டிலேயே கூட பலரும் இதுபோல இருப்பார்கள். குறிப்பாக ஏழை மக்களுக்குத் தான் டீ ரொம்பவே முக்கியம். பலருக்கும் டீ தான் காலை உணவாகவே கூட இருக்கும். ஒரு டீ, இரு பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு காலை உணவையே கூட பலரும் முடித்துக் கொள்வார்கள்.

சென்னை டீ பிரியர்கள்
ஏழைகள் என இல்லை.. அனைத்துத் தரப்பினருமே கட்டாயம் குடிக்கும் விஷயமாக டீ இருக்கிறது. இவர்களுக்குக் காலையும் மாலையும் டீ குடித்தால் தான் வேலையே ஓடும். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது. ஒரு டீ ரூ.12க்கும், காபி ரூ.15க்கும் விற்கப்பட்ட நிலையில், டீ ரூ.15, காபி -20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இவை மட்டுமின்றி லெமன் டீ, ராகிமால்ட் , சுக்கு காபி என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டது.
கோவையிலும் அதிர்ச்சி
இதற்கிடையே சென்னையைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி கோவையில் ஒரு டீ ரூ.20க்கு விற்கப்படும், ஒரு காபி ரூ. 26க்கும், பிளாக் டீ ரூ. 17க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஞ்சி டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவை ரூ.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பேக்கரி அல்லது ஹோட்டல் என்றால் இந்த விலையோடு கூடுதலாக ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விலைப்பட்டியலைப் பார்த்தால் நமக்கு இன்னொரு விஷயமும் புலப்படும். அதாவது சென்னையை விடவே கோவையில் அதிக டீ, காபி விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் சென்னை டீ பிரியர்களைக் காட்டிலும் கோவை டீ பிரியர்கள் அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
என்ன காரணம்
கடந்த 4 ஆண்டுகளாக டீ, காபி விலை உயர்த்தப்படாமல் இருந்தது.. கடை வாடகை அதிகரிப்பு, ஊழியர் சம்பளம், மூலப்பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்டவை காரணமாக டீ, காபி விலையை ஏற்றுவதாக எனக் கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அவர் சொன்ன காரணங்களில் நியாயம் உள்ளது என்றாலும் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.
கோரிக்கை
ஏற்கனவே விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் டீ, காபி விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தினசரி பார்த்தால் இது குறைவான தொகை போலத் தெரிந்தாலும் மாதச் செலவு எனக் கணக்கிட்டால் இதுவே பெரிய தொகைக்கு வந்துவிடும் என்பதால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்கவாவது வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications